வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கூட்டுக்குடும்ப மானியத் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய 4,500 குடும்பங்கள் சேர்ந்து வாழ்ந்து மகிழ்ந்து வருகின்றன.
அந்தக் குடும்பத்தினரும் ஒற்றையர்களும் தங்கள் பெற்றோர்கள் அல்லது பிள்ளைகள் வசிக்கும் அதே வீவக புளோக்கில் அல்லது அதே வீட்டில் சேர்ந்து இப்போது வசித்து வருகிறார்கள்.
வீவகவின் இந்த மானியத் திட்டம் 2015 ஆகஸ்ட்டில் அறிமுக மானது.
கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஆதரவு அளித்து, பரஸ்பர பராமரிப்பையும் ஆதரவையும் பேணி வளர்ப்பதற்கு உதவும் இந்தத் திட்டத்தின் கீழ், 30,100 பேர் முதன்முதலாக விண்ணப்பித்தனர்.
மறுவிற்பனை வீடு கேட்டு 2015 ஆகஸ்ட் 24 முதல் சென்ற ஆண்டு டிசம்பர் 31 வரை 96,800 பேர் விண்ணப்பித்தனர். இது ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது.
வீவகவின் இந்த மானியத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 29,600 குடும்பங்களுக்கு ஏறக்குறைய $550 மில்லியன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மறுவிற்பனை வீடு வாங்க, முதல் தடவையாக விண்ணப்பிக்கும் குடும்பத்தினர் அல்லது ஒற்றையருக்கு இத்திட்டம் உதவும்.
தங்களுடைய பெற்றோர் அல்லது பிள்ளை வசிக்கும் இடத்தில் இருந்து 4 கி.மீ. பரப்பளவுக்குள் மறுவிற்பனை வீட்டை வாங்கும் போது குடும்பத்திற்கு $20,000 மானியம் கிடைக்கும். ஒற்றையர் என்றால் இந்த மானியம் $10,000.
தங்கள் பெற்றோருடன் அல்லது பிள்ளைகளுடன் சேர்ந்து வசிக்க மறுவிற்பனை வீட்டை வாங்கும் குடும்பத்தினருக்கு $30,000 மானியமும் ஒற்றையருக்கு $15,000 மானியமும் கிடைக்கும்.
புதிய அடுக்குமாடி வீடுகளைப் பார்க்கையில், 2019 கடைசி நான்கு மாத காலத்தில் தங்களுக்கு வீடு வேண்டும் என்று கேட்டு 26,500 பேர் முதன்முறையாக விண்ணப்பித்தனர்.
அவர்கள் பல வகை வீடுகளைக் கேட்டு மனு செய்து இருக்கிறார்கள். அவர்களில் 80 விழுக்காட்டினர் அல்லது 20,800 குடும்பத்தினர் வீவகவின் மேம்பட்ட மசே நிதி திட்டத்துக்குத் தகுதி பெறுகிறார்கள்.
மாத வருமானம் $9,000க்கும் குறைவாக இருந்தால், முதல் தடவையாக விண்ணப்பித்தால் அத்தகைய குடும்பங்களுக்கு இந்த மானியத் திட்டத்தின் கீழ் கூடினபட்சம் $80,000 கிடைக்கும்.
மாதம் $4,500க்கு குறைவாக சம்பாதிக்கின்ற, 35 மற்றும் அதற்கு அதிக வயதுள்ள ஒற்றையருக்கு $40,000 வரை மானியம் உண்டு.
சென்ற ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, 43 குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ஏறக்குறைய $1.6 மில்லியன் கொடுக்கப்பட்டு இருப்பதாகக் கழகம் தெரிவித்துள்ளது. எஞ்சிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
சென்ற ஆண்டு செப்டம்பர் 11 முதல் டிசம்பர் 31 வரை மறுவிற்பனை வீடு கேட்டு சுமார் 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் பாதிப் பேர் முதல் தடவையாக விண்ணப்பித்தவர்கள்.
ஏறக்குறைய எல்லா குடும்பங்களுமே மேம்பட்ட மசே நிதி வீட்டு மானியத்துக்குத் தகுதி பெறுகின்றன. 2,000 குடும்பங்கள் மானியம் கேட்டு விண்ணப்பித்து உள்ளன.