தனக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்ட இங் கெக் வீ, தான் இறந்துவிட்டதாக அதிகாரிகளை நம்ப வைக்க முயன்றார். ஆனால் அதன்பின் போலிஸ் பிடியில் சிக்கிய இங்கிற்கு நேற்று 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்குமுன் 2017ஆம் ஆண்டில் நம்பிக்கை மோசடி தொடர்பாக முன்னாள் நிறுவன இயக்கு நரான இங்கிற்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறிய இங், பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் வியாபாரம் காரணமாக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சீனாவுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக இங் சென்றுள்ளதாக இங்கின் வழக்கறிஞர் கூற, விமானப் பயணச்சீட்டின் பிரதியைத் தருமாறு நீதிபதி ஆணையிட்டார். அதற்கு ஏற்ப ஒரு போலி விமானச் சீட்டை இங் வழக்கறிஞர் மூலம் சமர்ப்பித்ததுடன் இடையே இந்தோனீசியா செல்வதாகவும் தெரிவித்தார்.
இந்தோனீசியா சென்ற இங், தன் பெயரில் போலி இறப்புச் சான்றிதழ் ஒன்றைத் தயாரிக்கச் செய்து அதை வழக்கறிஞரைச் சென்றடையச் செய்தார். அதில் இங் இறந்ததாகக் குறிப்பிடப்பட்ட நாள் 2019ஆம் ஆண்டு, மார்ச் 10.
ஆனால் அதற்குப் பிறகும் மலேசியாவுக்குப் பலமுறை இங் பயணம் செய்தது தெரிய வரவே, மலேசிய போலிசின் உதவியுடன் இங் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. முதல் தண்டனையை நிறைவேற்றிய பின்னர் இந்த 18 மாதச் சிறைத் தண்டனையை இங் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.