இணையப் பாதுகாப்பு, பொய்ச் செய்திகள் பரவுவது உள்ளிட்ட பல்வேறு தற்காப்புத் துறை அம்சங்கள் குறித்து தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் ஜெர்மனியின் தற்காப்பு அமைச்சர் எண்கிரெட் கிரேம்ப்-கேரன்பாவ்(படம்) பேசியுள்ளனர்.
சிங்கப்பூர் ஆயுதப் படை ஜெர்மனியில் மேற்கொண்டு வரும் பயிற்சிகளுக்கு ஆதரவு நல்கி வருவது குறித்து டாக்டர் இங் தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன் இருதரப்பு தற்காப்பு உறவையும் மறுஉறுதிப்படுத்திக்கொண்டனர். ஜெர்மனியின் மியூனிக்கில் நடைபெற்று வரும் 56வது பாதுகாப்பு மாநாட்டின் ஓர் அங்கமாக இரு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெற்றது.
உலகநாடுகளின் 500க்கும் மேற்பட்ட அரசாங்கத் தலைவர்கள், தற்காப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவத் தலைவர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் ஆகியோருக்காக ஒவ்வோர் ஆண்டும் இந்த மூன்று-நாள் உச்சநிலை பாதுகாப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.