கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தடைகாப்பு ஆணையை மீறுவோரைத் தண்டிக்க அதிகாரிகளுக்கு பல்வேறு தெரிவுகளை அளிக்கும் விதத்தில் தொற்று நோய் தொடர்பான சட்டம் கடந்த வாரம் மாற்றி அமைக்கப்பட்டது.
தொற்று நோய்கள் சட்டம் (ஐடிஏ)-ன் கீழ் வரும் பல்வேறு குற்றங்கள் தற்போது தொற்று நோய்கள் (குற்றங்களுக்கான அபராதத் தொகுப்பு) விதிமுறைகள் 2020 என மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தாத சில வகை விதிமீறல்களுக்கு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு பதிலாக, அபராதம் விதிக்கப்படலாம்.
கடந்த செவ்வாய்க்கிழமை அரசிதழில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றம், ஒவ்வொரு தனிப்பட்ட விதிமீறல்களுக்கும் ஏற்ப அமைச்சு நடவடிக்கை எடுக்கலாம் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட பின்பு தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளாதவர்கள் அல்லது மற்றவர்களுக்கு நோய் பரப்பும் அபாயகரமான விதத்தில் நடந்துகொள்வோர் போன்றோருக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
தடைகாப்பு ஆணையை வேண்டுமென்றே மீறியவர்கள் போன்ற ஐடிஏ சட்டத்தை கடுமையாக மீறியவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
தடைகாப்பு ஆணை வழங்கப்பட்டவர்கள் வெளியில் செல்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க கைபேசி அழைப்புகள், அவர்கள் இருக்கவேண்டிய இடத்திற்குச் சென்று பார்ப்பது போன்ற நடவடிக்கைகளை அமலாக்க அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டது.
சீனாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூர்வாசிகள், நீண்ட தவணை தங்கும் அனுமதி பெற்றிருப்போருக்கு வீட்டிலேயே தங்கி இருக்கும் புதிய உத்தரவின்படி அவர்கள் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
தடையை மீறும் நீண்ட தவணை தங்கும் அனுமதி பெற்றிருப்போரின் அனுமதிச்சீட்டுகூட ரத்து செய்யப்படலாம்.
அத்தகைய விதிமீறல் புரியும் சிங்கப்பூரர்களுக்கு அபராதம், ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை போன்றவை விதிக்கப்படலாம்.
புதிய நடைமுறை இன்று இரவு 11.59 மணியிலிருந்து நடப்புக்கு வரும். கடந்த 14 நாட்களுக்குள் ஹுபெய் மாநிலத்துக்கு வெளியே சீனாவின் மற்றப் பகுதிகளுக்கு சென்று திரும்பும் அனைவருக்கும் இது பொருந்தும்.
தற்போது நடப்பிலுள்ள வேலை விடுப்பு திட்டத்தைவிட இது கடுமையானதாக இருக்கும்.
சீனாவிலிருந்து திரும்புவோருக்கான ‘வேலை விடுப்பு’ திட்டத்தின்படி, உணவு அல்லது வீட்டுப் பொருட்கள் வாங்க வெளியில் சென்று வரலாம். ஆனால் புதிய உத்தரவில் வெளியில் எங்கும் செல்லக்கூடாது.
#Corona #IDA #தமிழ்முரசு