மற்ற கலாசாரங்கள், நாடுகள் பற்றி மாணவர்கள் புரிந்துகொள்ள அரசாங்கம் புதிய இலக்கை வகுத்துள்ளது. அதன்படி, உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த 70 விழுக்காட்டு உள்ளூர் பட்டக்கல்வி மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பயண அனுபவம் இருக்க வேண்டும்.
அவர்களில் 70 விழுக்காட்டினர் தென்கிழக்காசிய நாடுகள், சீனா அல்லது இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கலாசாரம் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தை நேற்று தாக்கல் செய்தபோது துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இதுபற்றி பேசினார்.
உள்ளூர் இளைஞர்கள் தென்கிழக்காசியாவில் உள்ள நகரங்கள், சீனா அல்லது இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள புதிய ஆசிய வட்டார அனுபவத்துக்கான தயார்நிலைத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கிறது.
உலகளாவிய திறன் திட்டத்தின்கீழ் செயல்படும் அனுபவக் கல்வித் திட்டங்களைப் புதிய திட்டம் மேம்படுத்தும் என்று திரு ஹெங் கூறினார்.
திறனாளர்களை உலகமயமாதலுக்குத் தயார்ப்படுத்தும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. சிங்கப்பூர் நிறுவனங்களில் சேர்ந்து வெளிநாடுகளில் அனுபவக் கல்வி பெற மாணவர்களுக்கு இந்தத் திட்டம் கூடுதல் நிதி உதவி வழங்குகிறது.
தற்போதைய நிலவரப்படி, மாணவர்களுக்கு அனுபவக் கல்வி வழங்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள் அந்த மாணவர்களின் சம்பளத்துக்காக 70 விழுக்காடு வரை நிதி ஆதரவு பெற தகுதி பெறுகின்றன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 உயர் கல்வி நிலைய மாணவர்களும் இளம் பட்டதாரிகளும் வெளிநாடுகளில் வேலை அனுபவம் பெற அரசாங்கம் இலக்கு வகுத்திருப்பதாக திட்டத்தை அறிமுகம் செய்தபோது வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்திருந்தார்.
மூன்று ஆண்டுகள் வரை வேலை அனுபவம் கொண்ட சிங்கப்பூரர்களை தென்கிழக்காசிய நாடுகள், சீனா, இந்தியா உட்பட மற்ற முக்கிய நாடுகளுக்கு அனுப்ப வேகமாக வளர்ந்து வரும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் இத்திட்டம் ஆதரவு தருகிறது.
உயர்கல்வி நிலைய மாணவர்களில் பாதிப் பேர் அனுபவக் கல்வி, மாணவர் பரிமாற்றத் திட்டம், சேவை வழிக் கற்றல், கல்விப் பயணங்கள் ஆகியவற்றின் வழி அனுபவம் பெறுவதை திரு ஹெங் சுட்டினார்.
ஆசியா உட்பட மற்ற நாடுகளில் பிறரது கலாசாரங்களுக்கு மத்தியில் சிறப்பாகச் செயல்பட சிங்கப்பூர் மாணவர்கள் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
“வேலை நியமன விகிதம் உயர்வாக இருக்கிறது. ஆரம்ப சம்பளமும் ஏற்றம் கண்டுள்ளது. சிங்கப்பூர்-தொழில்துறை உபகாரச் சம்பளத் திட்டத்தின்கீழ் நிறுவனங்களுடன் பங்காளித்துவத்தில் இணைந்து சிங்கப்பூர் திறனை மேம்படுத்துகிறோம்,” என்றார் திரு ஹெங்.