வாட்ஸ்அப் கணக்குகளைத் தங்கள் வசப்படுத்திக்கொள்ளும் மோசடிக்காரர்கள், அந்தக் கணக்குகளுக்கு உரியவர்களின் நண்பர்களைத் தொடர்புகொண்டு கடனட்டை அல்லது பற்றட்டையைப் படம் எடுத்து அனுப்பும்படி கேட்டுப்பெற்று, அதைக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாக போலிஸ் எச்சரித்து இருக்கிறது.
இப்படி, வாட்ஸ்அப் கணக்குகளைக் கையகப்படுத்தி, அவற்றின்மூலம் மோசடி செய்ததாக கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து குறைந்தது 18 புகார்கள் வந்துள்ளன.
அத்தகைய மோசடியில், ஆறு இலக்க உறுதிசெய்யும் குறியீட்டை அனுப்பும்படி நண்பர் ஒருவரிடம் இருந்து வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி வரலாம். ஆனால், உண்மையில் அந்தக் குறுஞ்செய்தி அந்த நண்பரால் அனுப்பப்பட்டு இருக்காது. அந்த நண்பரின் வாட்ஸ்அப் கணக்கைக் கையகப்படுத்திய மோசடிக்காரர் அக்குறுஞ்செய்தியை அனுப்பியிருப்பார்.
அந்த ஆறு இலக்க உறுதிசெய்யும் குறியீட்டை அனுப்பும்பட்சத்தில், அந்த கைபேசி எண்ணுடன் வாட்ஸ்அப் கணக்கையும் மோசடிக்காரர் தன்வசப்படுத்தி விடுவார். புதிய கைபேசியில் அல்லது கருவியில் ஒரு தொலைபேசி எண்ணைப் பதிவுசெய்யும்போது வாட்ஸ்அப் அந்த ஆறு இலக்கக் குறியீட்டைக் கேட்கும்.
இப்படிக் கையகப்படுத்திய கணக்குகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட முதல் ஆளைப் போல தங்களைக் காட்டிக்கொண்டு, அவரது வாட்ஸ்அப் கணக்கில் உள்ள நண்பர்களை மோசடிக்காரர்கள் தொடர்புகொள்வர்.
லஸாடா, ஷாப்பி, கியூ10 போன்ற இணையக் கடைகள் நடத்தியது போன்ற போலி அதிர்ஷ்டக் குலுக்கலில் அவர்களுக்குப் பரிசு விழுந்துள்ளதாகவும் அதைப் பெற உதவுவதாகவும் கூறி, அவர்களது கைபேசி எண்களையும் கடனட்டை அல்லது பற்றட்டையைப் படம் எடுத்து அனுப்புமாறும் மோசடிக்காரர்கள் கேட்பர்.
பின் அவர்களின் கைபேசிக்கு வரும் ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல்லை (ஓடிபி) கூறுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர். அதைப் பயன்படுத்தி, அந்த கடனட்டை அல்லது பற்றட்டை வழியாக மோசடிக்காரர்கள் பரிவர்த்தனை மேற்கொள்வர்.
முன்னதாக, ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகங்களிலும் இதேபோன்ற தந்திரத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாகப் புகார்கள் வந்துள்ளன.
ஆகையால், வங்கிக் கணக்கு, கடனட்டை, பற்றட்டை, ‘ஓடிபி’ போன்ற தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் வேறு எவரிடமும் தரவேண்டாம் என பொதுமக்களுக்கு போலிஸ் நினைவுறுத்தியுள்ளது.
அதேபோல, வாட்ஸ்அப் கணக்குகளுக்கான உறுதிசெய்யும் குறியீட்டையும் பகிரவேண்டாம் என போலிஸ் அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்கள் வழியாக முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தப் புதுவகை மோசடி குறித்து தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற நேரடி அழைப்பு எண் மூலமாகவோ அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப் பக்கம் வழியாகவோ போலிசைத் தொடர்புகொள்ளலாம்.
#WhatsApp #மோசடி #தமிழ்முரசு