சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்க்க இந்தியா யோசனை

சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்க்க இந்தியா யோசனை

2 mins read
1e2b372b-0e5e-46e3-a14a-d10a922a0066
மும்பை சத்ரபதி மகராஜ் அனைத்துலக விமான நிலையம். படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூருக்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய அரசாங்கம் அதன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. கொவிட்-19 கொரோனா கிருமி பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும் ஹாங்காங்கிற்கும் செல்ல வேண்டாம் என ஏற்கெனவே கடந்த மாதம் அமைச்சு ஆலோசனை வழங்கி இருந்தது.

மேலும் ஒரு நடவடிக்கையாக வெளிநாட்டுப் பயணிகளுக்கான பரிசோதனையை அதிகரிக்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வருவோர் விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 21 விமான நிலையங்களிலும் பெரிய கடல் துறைமுகங்களிலும் இந்தப் பரிசோதனை நீடித்து வருகிறது. சனிக்கிழமை வரை 3,97,152 விமானப் பயணிகளும் கடல் வழியாக வந்த 9,695 பேரும் பரிசோதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேலும் ஆறு நாடுகளில் இருந்து வருவோர் இன்று (திங்கட்கிழமை) முதல் பரிசோதிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மலேசியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனீசியா, வியட்னாம், நேப்பாளம் ஆகிய நாடுகள் அவை. இந்த நாடுகளில் இருந்து வரு வோரைப் பரிசோதிக்கும் பணியை மும்பை விமான நிலையம் நேற்று தொடங்கிவிட்டது.

சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்ப்பது குறித்தும் மேலும் ஆறு நாடுகளின் விமானப் பயணிகளைப் பரிசோதிப்பது குறித்தும் முடிவெடுக்க நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோ சனைக் கூட்டத்தை இந்தியா நடத்தியது. சிங்கப்பூருக்கு அதிகமாக வந்து செல்லும் விமானப் பயணிகளில் இந்திய நாட்டவரும் அடங்குவர். கடந்த ஆண்டு மட்டும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைப்படி இந்தியர்கள் சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்த்தால் இங்குள்ள பயணத்துறையில் தாக்கம் ஏற்படுவது உறுதி என்றும் ஆயினும் அது எந்த அளவுக்கு இருக்கும் என்று இப்போதைக்குக் கணிக்க முடியாது என்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத் தலை வர் பிரணாப் சர்க்கார் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருக்கும் மேலும் மூன்று இந்தியர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து அக்கப்பலில் 12 இந்தியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் நேற்று கூறியது. இதற்கிடையே, கேரளாவில் மூன்று மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.