ரும்பியா எல்ஆர்டி நிலையத்திலுள்ள ஒரு மின்தூக்கியின் பொத்தான்கள் மீது எச்சில் துப்பிய சம்பவம் தொடர்பில் மூன்று பதின்ம வயதினரை போலிசார் விசாரித்து வருகின்றனர்.
எச்சில் வடியும் மின்தூக்கி பொத்தான்களின் புகைப் படத்தை எஸ்பிஎஸ் டிரான்சிட் தனது பேஸ்புக்கில் சென்ற வியாழக்கிழமை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. கொரோனா கிருமி தாக்கத்திற்கு மத்தியில் நடந்துள்ள இச்செயல் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. செங்காங் எல்ஆர்டி சேவையை நடத்தும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், “வெறுக்கத்தக்க இந்த செயல்” தொடர்பில் போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது.
குறும்புச் செயல் குற்றத்தின் தொடர்பாக 15 வயதுடைய மூவர் விசாரிக்கப்படுவதாக சனிக்கிழமையன்று போலிசார் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர். போலிஸ் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த மூவரது அடையாளங்களும் விசாரணை மூலம் வெள்ளி அன்று உறுதிசெய்யப் பட்டதாக அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் கூறினர்.