மலேசிய அரசியல் நிலவரத்தை சிங்கப்பூர் அரசாங்கம் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பிரதமர் பதவியிலிருந்து டாக்டர் மகாதீர் முகம்மது நேற்று முன்தினம் பதவி விலகினார். இதையடுத்து ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணியைவிட்டு விலகினர். இதனால் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மையைக் கைப்பற்ற 112 தொகுதிகள் தேவை.
ஆனால் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியதை அடுத்து, அந்தக் கூட்டணிக்குத் தற்போது 92 இடங்கள் மட்டுமே உள்ளன. பதவி விலகியுள்ள டாக்டர் மகாதீரை இடைக்காலப் பிரதமராக மலேசியாவின் மாமன்னர் நியமித்துள்ளார்.
இதற்கிடையே, மலேசியத் தலைவர்கள் எடுக்கும் முடிவை சிங்கப்பூர் மதிக்கும் என்றும் நியமிக்கப்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் என்றும் திரு ஹெங் கூறினார்.
கிச்சனர் சாலையில் உள்ள பார்க் ராயல் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு ஹெங் கலந்துகொண்டபோது இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மலேசியாவில் அரசியல் சூழல் மிகவும் வேகமாக மாறி வருவதாக துணைப் பிரதமர் தெரிவித்தார்.
“இது அவர்களது உள்ளூர் விவகாரம். மலேசியாவில் உள்ள வெவ்வேறு கட்சிகளிடையே விரைவில் இணக்கம் காணப்படும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.
மலேசியா, சிங்கப்பூருக்கு மிகவும் அருகில் இருக்கும் நாடு என்றும் இரு நாடுகளுக்கும் இடையே பல கூட்டுத் திட்டங்கள் நடை
முறையில் இருப்பதாகவும் திரு ஹெங் கூறினார். சிங்கப்பூர்-ஜோகூர் பாரு பெருவிரைவு ரயில் சேவை, கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் சேவை ஆகியவை அவற்றில் அடங்கும்.
கொவிட்-19 எனப்படும்
கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள இரு நாடுகளும் இணைந்து கூட்டுப் பணிக் குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“மலேசியாவும் சிங்கப்பூரும் பல்வேறு துறைகளில் ஒத்துழைத்துச் செயல்படுகின்றன. இதை நாம் தொடர வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளும் வலுவடையும். அதுமட்டுமல்லாது, ஆசியானில் இணைந்து செயல்பட்டு அதன் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்,” என்றார் திரு ஹெங்.