கொரோனா கிருமி பரவும் சூழ்நிலையில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஐந்து நாள் விடுப்பை எப்படி கணக்கிட வேண்டும் என்பது குறித்து அமைச்சு வழிகாட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டி, முதலாளிகளுக்கு தெளிவான வழிகாட்டியாக இருக்கும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அதே கிருமியால் ஏற்படும் காய்ச்சல், இருமல், தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாள் விடுப்பு வழங்க மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஆனால் ஐந்து நாள் விடுப்பு வழங்கப்பட்டால் சட்டப்படி தங்களுக்குள்ள 14 நாள் மருத்துவ விடுப்பு குறைந்துவிடும் என்று ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனை சுட்டிக்காட்டிய வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேட்ரிக் டே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஸாக்கி முகம்மது, ஊழியர்களின் வெளிநோயாளி மருத்துவ விடுப்பு நாட்களில் ஒரு பகுதியாக ஐந்து நாள் விடுப்பை முதலாளிகள் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.
ஆனால் ஊழியர்களுக்கு அதிக ஆதரவை வழங்க விரும்பினால் நீண்டநாள் மருத்துவமனை விடுப்பில் ஒரு பகுதியாகவும் அதை முதலாளிகள் கணக்கில் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
“எதிர்காலத்தில் ஊழியர்களுக்கு போதுமான மருத்துவ விடுப்பு நாட்கள் இருப்பதற்காக முதலாளிகள் நீக்குப்போக்குடன் நடந்து கூடுதலாக ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்புகளை வழங்கலாம்,” என்று திரு ஸாக்கி மேலும் சொன்னார்.