கொரோனா கிருமித்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள உடனடி பாதிப்புகளை சிங்கப்பூர் எதிர்கொள்ள உதவுவதற்கான $106 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
கிருமித்தொற்று பாதிப்பைத் தணிக்கும் அதே வேளையில் பருவநிலை மாற்றம் போன்ற நீண்ட கால விவகாரங்களையும் சமாளிக்க இந்த வரவுசெலவுத் திட்டம் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.
அரசாங்கம் செலவழிக்கும் திட்டங்களுக்கு ஆதரவாக உள்ள கொள்கைகள் உட்பட கடந்த மூன்று நாட்களில் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வந்ததைத் தமது 107 நிமிட உரையில் நேற்று குறிப்பிட்டார் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட்.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தை ‘ஒன்றிணைக்கும் வரவு செலவுத் திட்டம்’ எனக் குறிப்பிட்டார் அவர்.
வலுவிழந்து வரும் உலகப் பொருளியலுக்கு இடையே ‘கொவிட்-19’ கிருமித்தொற்றும் சேர்ந்து வந்து அனைவரையும் ஆட்டங்காண வைத்துள்ளதால் ‘ஒன்றிணைக்கும் வரவுசெலவுத் திட்டம்’ என்று அதற்குப் பெயரிட்டதாக திரு ஹெங் சொன்னார்.
இந்த நெருக்கடி காலத்தில் சிங்கப்பூரர்களிடையே ஒற்றுமை இருப்பதன் முக்கியத்துவத்தை இப்பெயர் குறிப்பதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
“நம் தனிப்பட்ட மீள்திறனையும் நம் குணத்தின் பலத்தையும் சவால்மிக்க, நெருக்கடி காலத்தின்போது நமது செயல்பாடுகள் காட்டிவிடும்,” என்றார் அமைச்சர் ஹெங்.
“அதோடு நம் சமூக ஒற்றுமைக்கும் பிணைப்புக்கும் அது ஒரு பரிட்சை,” என்றார் அவர்.
கிருமித்தொற்று பாதிப்புடன் மூப்படைதல், தொழில்நுட்ப இடையூறு, சமூக சமத்துவமின்மை, பருவநிலை மாற்றம் போன்ற நீண்ட கால சவால்களையும் சிங்கப்பூரர்களால் ஒன்றாக கடந்து வர முடியும் என்றார்.
உலகநாடுகளிலும் அண்டை நாடுகளிலும் பிரிவினைகளைத் தூண்டுதல், இனவாத மோதல்கள், அரசியல் குழப்பம் போன்ற பல்வேறு சிக்கல்களால் சமுதாயங்கள் சீர்குலைவதாக சுட்டிய திரு ஹெங், நம் ஒற்றுமையை நாம் லேசாக எண்ணிவிடக்கூடாது என்று சிங்கப்பூரர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
நீதி, சமத்துவம் ஆகியவற்றை அடியொற்றிய இலக்குடன் உள்ள நம் சமுதாயத்தில் பரந்துபட்ட செழிப்பும் அனைவருக்கும் சமமான வாய்ப்பும் கிடைக்கின்றன.
இதற்கிடையே தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொகை மாற்றங்கள் ஏற்படுத்தும் சவால்களால் நாம் நமது தனிப்பட்ட விருப்பங்களையும் பிரச்சினைகளையும் மட்டும் கவனித்துக்கொள்ளக்கூடாது என்றார் அவர்.
அதற்குப் பதிலாக பிணைப்புடன், திறந்த மனதுடன், சமுதாயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தத் தொடர்ந்து செயல்படவேண்டும் என்று நினைவுறுத்தினார் திரு ஹெங்.
நாட்டில் உள்ள வெவ்வேறு தலைமுறைகளையும் ஓர் ஓட்டப்பந்தயத்தில் போட்டியிடும் குழு உறுப்பினர்களுக்கு ஒப்பிட்டுப் பேசினார் அமைச்சர் ஹெங்.
நமக்குக் கிடைத்ததைச் சரியாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்; நமது முறை வரும்போது சிறப்பாகச் செயல்பட வேண்டும்; நமக்குப் பிறகு வருபவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என விளக்கமளித்தார் துணைப் பிரதமர் ஹெங்.