ஆர்ச்சர்ட் டவர்ஸ் இரவு விடுதி ஒன்றின் வெளியே இரு கும்பல்களுக்கு இடையே நடந்த கைகலப்பில் மாட்டிக் கொண்ட இந்திய ஆடவர் உயிர் இழந்தார்.
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி நிகழ்ந்தது.
திரு சதீஷ் நோவல் கோபிதாஸ் எனும் அந்த 31 வயது ஆடவரைத் தாக்கிய குற்றத்திற்காக இருவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திரு சதீஷை கொலை செய்ததாக முதலில் ஒரு பெண் உட்பட எழுவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
23 வயது நெட்டலி சியாவ் யூ சென், 26 வயது ஜொவெல் டான் யுன் ஷெங், 26 வயது சான் ஜியா சிங், 26 வயது ஆங் டா யுவன், 27 வயது டான் சென் யாங், 25 வயது லூ பூன் சோங், 22 வயது டான் ஹொங் செங் ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பிறகு நெட்டலி சியாவ், ஜொவெல் டான், ஆங் டா யுவன் ஆகியோரின் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது. அவர்கள் எந்த ஆயுதமும் கொண்டு திரு சதீஷைத் தாக்கவில்லை.
நீதிமன்றத்தில் ஜொவெல் டானும் அங்க் டா வுவனும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஜொவெல் டானுக்கு நான்கு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அங்கிற்கு எட்டு மாதங்கள் சிறையும் ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
லூ பூன் சோங், சான் ஜியா சிங், டான் ஹொங் செங் ஆகியோரின் குற்றச்சாட்டுகளும் கடந்த ஆண்டு குறைக்கப்பட்டன. அவர்கள் ஆயுதம் ஏந்திய ஒருவருடன் கூட்டாக செயல்பட்ட குற்றத்தை எதிர்நோக்குகின்றனர்.
மீதமுள்ள டான் சென் யாங் தான் வைத்திருந்த கத்தியால் திரு சதீஷைக் காயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இவர் மட்டுமே கொலைக் குற்றத்தை எதிர்நோக்குகிறார்.
மற்ற நால்வரின் வழக்குகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
#சிறை #ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை

