சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமி பரவி வரும் வேளையில், ஒருவர் மற்றவரிடம் கனிவன்புடன் நடந்துகொள்ளுமாறு துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
"அக்கறை உடையவர்களாகவும் பொறுப்பு உடையவர்களாகவும் உள்ள சிங்கப்பூரர்கள், விழிப்புடனும் உள்ளனர்.
"கனிவன்பு, அக்கறை போன்ற அம்சங்கள் நமது வாழ்வின் ஒரு பகுதியாகவே அமைய வேண்டும். கொரோனா கிருமித்தொற்று நமது மருத்துவ முறையைச் சோதித்துவிடுவதோடு நின்றுவிடாது.
"மக்களின் பண்புநலனையும் அது சோதிக்கிறது," என்று கூறினார் நிதி அமைச்சருமான திரு ஹெங்.
'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த 'ஒன்றாக எதிர்கொள்வோம்' எனும் இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.
கிருமிப் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க அயராது போராடி வரும் முதல்நிலை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த இயக்கம் சிங்கப்பூரர்களை ஊக்குவித்து வருகிறது.
அதேவேளையில், கிருமி பரவல் ஏற்படுத்தும் பல்வேறு சவால்களைச் சமூக பொறுப்புடன் எதிர்கொள்ளவும் இது ஊக்குவிக்கிறது.
இந்த இயக்கம் சிறப்பாக செயல்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த துணைப் பிரதமர் ஹெங், ஒருவர் மற்றவருக்கு எந்தெந்த வகையில் உதவலாம் என்பது குறித்து மக்கள் யோசிக்கலாம் என்று கூறினார்.
வேலை முடிந்து பொதுப் போக்குவரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த சீருடை அணிந்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைப் பொதுமக்களில் சிலர் புறக்கணித்தது குறித்த செய்திகள் முன்னதாக வெளிவந்ததைத் தொடர்ந்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
எனினும், மருத்துவப் பணியாளர்களுக்கு ஆதரவுக்குரல் கொடுக்க ஏராளமானோர் முன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவ பல்வேறு இயக்கங்களும் உருவெடுத்துள்ளன.
உதாரணத்திற்கு, பொதுமக்கள் நன்கொடையாக வழங்கும் முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் உள்ளிட்ட சுகாதார பொருட்களை Contribute.sg எனும் புதிய அமைப்பு பெற்றுக்கொள்கிறது.
வெளியே செல்ல முடியாமல் வீட்டில் இருக்கும் நோயாளிகள், டாக்சி ஓட்டுநர்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இப்பொருட்களை அந்த அமைப்பு விநியோகம் செய்கிறது.
ஏறத்தாழ 250 பெட்டிகள் முகக்கவசங்களையும் 100 லிட்டர் கிருமி நாசினியையும் சேகரித்துள்ள அந்த அமைப்பு, வாம்போ உள்ளிட்ட பல பகுதிகளில் வசிப்போருக்கு அவற்றை விநியோகித்து வருகிறது.

