மனிதவள அமைச்சு வேலை காலியிடங்கள் குறைந்தன

மனிதவள அமைச்சு வேலை காலியிடங்கள் குறைந்தன

2 mins read
9c4f988f-a581-4584-8c4e-9def17c12f15
-

கொரோனா கிருமிப்பரவலுக்கு முன்னதாகவே பொருளியலின் நிச்சியமற்ற சூழலுக்கு மத்தியில் முதலாளிகள் ஆள்சேர்ப்பு குறித்து கூடுதல் கவனத்துடன் செயல்படுகின்றனர். இதன் விளைவாக, பருவத்திற்கேற்ப மாற்றப்பட்ட வேலை காலியிடங்களுக்கும் வேலை இல்லாதவர்களுக்கும் இடையிலான விகிதம் 0.84க்குக் குறைந்தது. இது, கடந்த ஆண்டின் 1.09ஐக் காட்டிலும் குறைவு. ஆக அண்மையதான இந்தப் புள்ளி விவரங்களை மனிதவள அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் புத்தாக்கமும் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு, கட்டுமானத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைவிட அதிகம். அத்துடன், ஒட்டுமொத்த ஊழியரணி புத்தாக்கமு ம் 1.5 விழுக்காடு குறைந்தது. இது ஒன்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முதல் சரிவாகும். பொருளியல் வளர்ச்சியின் மெதுவடைவுடன் கூடிய வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு இந்நிலை ஒத்துப்போகும் விதத்தில் இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையிழந்தோர் ஆறு மாதங்களுக்குள் புதிய வேலையில் சேரும் எண்ணிக்கை 2018ல் 63 விழுக்காட்டிலிருந்து கடந்தாண்டு 64 விழுக்காட்டுக்கு உயர்ந்தது.

எதிர்பார்த்ததைவிட கடந்தாண்டின் ஊழியர்ச் சந்தை முன்னேற்றம் அடைந்திருப்பதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார். அண்மைய சில ஆண்டுகளாக வேலையின்மை குறைந்த அளவில் இருப்பதாகக் கூறிய திருமதி டியோ, சிங்கப்பூரர்களின் ஆள்சேர்ப்பு 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு சற்று வேகமாக வளர்ந்துள்ளது. அத்துடன், நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கும் ஆட்குறைப்பு விகிதம் சற்று குறைந்துள்ளது.

இருந்தபோதும் கொவிட்-19 கிருமிப்பரவல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் காலத்திற்கு நீடிக்கும் என்று கூறிய திருமதி டியோ, எதிர்வரும் கரடுமுரடான பாதையை எதிர்கொள்ள சிங்கப்பூரர்கள் தயாராகவேண்டும் என்று கூறினார். இதனால் வேலையிழப்பைத் தடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றார் திருமதி டியோ.