கொரோனா கிருமித்தொற்று நாட்டைப் பாதித்துள்ள இக்காலகட்டத்தில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார். இதில் சிங்கப்பூரர்கள் மெத்தனத்துடன் இருந்துவிடக்கூடாது என்றார் அவர்.
சிராங்கூன் கார்டன் வேயில் அமைந்திருக்கும் லிங் குவாங் தாதிமை இல்லத்துக்கு அதிபர் ஹலிமா நேற்று சென்றிருந்தபோது இதைத் தெரிவித்தார்.
ஆரம்பகால, தீவிர சிகிச்சை, சமூக ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து வலியுறுத்தப்படுவதால் அவர்களுக்குக் கூடுதல் தன்னம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அதிபர் ஹலிமா தெரிவித்தார்.
கடந்த மாதம் 24ஆம் தேதியன்று அங் மோ கியோ குடும்ப மருத்துவ மருந்தகத்துக்கும் இம்மாதம் 1ஆம் தேதி சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் அதிபர் சென்றிருந்தார்.
அங்கு அவர் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரைப் பற்றி சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களிடம் பேசினார்.
மூன்று பிரிவுகளைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் தங்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது என்பதை நன்கு உணர்வதாகவும் தொடர்ந்து மிகுந்த முனைப்புடன் செயல்படுவதாகவும் அதிபர் ஹலிமா கூறினார்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக முதியோருக்காக அரசாங்க அமைப்புகள் ஏற்பாட்டில் நடைபெறும் நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சவால்மிக்க இந்தக் காலகட்டத்தில் முதியோருடன் அவர்களது குடும்பத்தினர் நேரம் செலவழிக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா அறிவுறுத்தினார்.

