கொரோனா கிருமி பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நான்கு துறைகளுக்கு திறன் பயிற்சியிலும் ஊழியர்களை வேறு வேலைகளில் அமர்த்தவும் கூடுதல் ஆதரவு வழங்கப்படும். சுற்றுலா, விமானப் போக்குவரத்து, சில்லறை விற்பனை, உணவு சேவைகள் ஆகிய நான்கு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கான மறுதேர்ச்சித் திட்டங்களை சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு வலுப்படுத்தி வருகிறது.
பொருளியல் சூழல் மந்தமாக உள்ள இந்தக் காலகட்டத்தில் மறுதேர்ச்சித் திட்டங்கள் மிகவும் அவசியமானவை என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். துவாசில் உள்ள 'எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனத்திற்கு நேற்று சென்றிருந்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடைநிலை ஊழியர்களை மறுதேர்ச்சி பெறச் செய்து, அவர்களைப் புதிய வேலைகளில் அமர்த்தும்படி நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் பணியமர்வுப் பயிற்சித் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும்.
முன்னதாக, மாதத்திற்கு ஓர் ஊழியருக்கு 70% வரை, அதாவது அதிகபட்சம் $2,000 என்ற அடிப்படையில் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் ஊழியரணி ஊதிய ஆதரவு வழங்கி வந்தது. அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு இந்த ஆதரவு வழங்கப்பட்டு வந்தது. இனி, அது ஆறு மாதங்களாக நீட்டிக்கப்படும். அத்துடன், ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேல் வேலையில்லாமல் இருந்த 40 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஊழியர்களுக்கான ஊதிய ஆதரவு 90% வரை, அதாவது அதிகபட்சம் $3,000 என உயர்த்தப்படும்.
இந்த மாற்றங்கள், ஹோட்டல், சில்லறை விற்பனை, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் நடப்பில் உள்ள பணியமர்வுப் பயிற்சித் திட்டங்களுக்கும் இது பொருந்தும். உணவு சேவைகள் துறைக்கும் இதேபோன்று புதிய பணியமர்வுப் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
விமானப் போக்குவரத்து தவிர்த்து மற்ற மேம்பாடுகள் அனைத்தும் உடனடியாக நடப்பிற்கு வரும். அறைகலன் துறையில் பணியாற்றும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் மின்னிலக்கப் பொறுப்புகளைக் கையாளும் வகையில் புதிய, ஆறு மாதகால 'வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தை' சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு அறிவித்துள்ளது.

