சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சில்க்ஏர் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 26ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. மலிவுக் கட்டண விமானச் சேவை வழங்கும் ஸ்கூட் விமானச் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கான விசாக்களை ரத்து செய்வதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
அதையடுத்து, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சீனாவுக்கும் இத்தாலிக்குமான விமானச் சேவைகளை எஸ்ஐஏ ஏற்கெனவே குறைத்துவிட்டது.
அனைத்துலக விமான நிறுவனங்களான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், கேத்தே பசிபிக், தாய் ஏர்வேஸ் போன்றவையும் இந்தியாவுக்கு விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகியவற்றுக்கு பயணக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் விதித்துள்ளதை அடுத்து, ஐரோப்பாவுக்கான கூடுதல் விமானச் சேவைகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆக அண்மைய அறிவிப்புகள், விமானப் போக்குவரத்து துறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எஸ்ஐஏ ஆரய்ந்து அருவதாக அதன் பேச்சாளர் கூறினார்.
#சிங்கப்பூர் #விமானச் சேவை #SIA #SCOOT #SilkAir