அடுத்த பொதுத் தேர்தலில் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி, நான்கு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.
இப்போது அந்தத் தொகுதியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்து. பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியில் உள்ளடங்கும் பீஷான் நார்த் பகுதியில் இருந்து மேரிமவுண்ட் என்ற புதிய தனித்தொகுதி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு இவ்வாறு பரிந்துரைத்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தக் குழுத்தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை 126,556லிருந்து 100,036 பேராகக் குறையும். புதிய பீஷன்-தோ பாயோ குழுத்தொகுதி, அருகில் இருக்கும் பொத்தோங் பாசிர் தனித்தொகுதியைச் சேர்ந்த 3,592 வாக்காளர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும்.
தனித்தொகுதியாக பொத்தோங் பாசிர் தொடர்ந்து இருக்கும். இது, மரின் பரேட் குழுத்தொகுதியில் இருந்து 5,404 வாக்காளர்களைப் பெற்று, மொத்தம் 18,551 வாக்குகளுடன் தேர்தலைச் சந்திக்கும்.

