கோலாலம்பூர் பள்ளிவாசல் ஒன்று ஏற்பாடு செய்த சமய நிகழ்வில் கலந்துகொண்ட சிங்கப்பூரர்களில் ஐவர் இங்கு திரும்பிய பின்னர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. ஆனால் அவர்கள் கிருமி பாதிப்புக்குள்ளாகியிருந்த சமயத்தில் சிங்கப்பூரிலுள்ள 10 பள்ளிவாசல் களுக்குச் சென்றுவிட்டனர்.
இதனால் அந்த 10 பள்ளிவாசல்களுக்குச் சென்ற மற்றவர்கள், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஏதேனும் ஒருவருடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) நேற்று அறிக்கை வெளியிட்டது.
கிருமி தொற்றிய ஐவரும் இம்மாதம் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பள்ளிவாசல்களுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
மஸ்ஜித் அல்-இமான், மஸ்ஜித் அல்-முத்தகீன், மஸ்ஜித் ஹஜ்ஜா ஃபாத்திமா, மஸ்ஜித் ஹஜ்ஜா ரஹிமபி கெபுன் லிமாவ், மஸ்ஜித் காசிம், மஸ்ஜித் பெட்டம்பட்டான் மலாயு செம்பவாங், மஸ்ஜித் சுல்தான், மஸ்ஜித் அல்-மவத்தா, மஸ்ஜித் ஜாமிஆ (சூலியா) மற்றும் மஸ்ஜித் அல்-இஸ்திகாமா ஆகியவை பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களாகும்.
இப்பத்து பள்ளிவாசல்களுக்கு சென்றவர்கள் தங்களின் சுகா தாரத்தை இரண்டு வாரங்களுக்குக் கண்காணிக்குமாறு முயிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் தொடர்பில் வெளிநாடுகளில் நடைபெறும் சமயக் கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்பும் சிங்கப்பூரர்கள் தங்களின் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அறிவுறுத்தியுள்ளார்.
"இது சவால்மிக்க காலகட்டம். ஆனால் நம் வளங்களைப் பயன்படுத்திக் கிருமியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பதில் நிம்மதி கொள்வோம்," என்றார் அவர்.
துப்புரவு பணிகளுக்காக சென்ற வெள்ளிக்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு இங்குள்ள 70 பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

