கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று காரணமாக நீண்டகால பாதிப்புக்குத் தயாராக வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
"எல்லாம் சரியாகிவிடும் என்ற விருப்பம் இருந்தாலும் நிலைமை மேலும் மோசமாகும் என்று எதிர்பார்த்து அதற்குத் தக்கவாறு செயல்பட வேண்டும்," என்று அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சிஎன்பிசிக்கு கடந்த புதன்கிழமையன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
"உங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பற்றி நன்றாக தெரியும். நாங்கள் எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாகச் செயல்படுவோம். பிரச்சினைகளை மெத்தனப்போக்குடன் விட்டுவிடமாட்டோம்.
"ஆக மோசமான நிலைமையை எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
"எங்கள் மக்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்கள் மக்களுக்கு நன்றாகப் புரிகிறது," என்றார் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்.
சிஎன்பிசி நிகழ்ச்சி படைப்பாளர்கள் ஸ்ரீ ஜெகராஜா, மார்ட்டின் சூங் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.
"உலக நாடுகள் ஒன்றிணைந்து பரிசோதனைச் சாதனங்கள், தடுப்பூசிகள் ஆகியவற்றை உருவாக்க ஆகச் சிறந்த அணுகுமுறைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நன்கு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்," என்றார் அமைச்சர்.
கொரோனா கிருமித்தொற்று மோசமாக இருக்கும் இந்நேரத்தில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுவது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், "அதுகுறித்து நீங்கள் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்," என்று கூறினார்.
"இப்போதைய சூழ்நிலைக்கு தேர்தல் முக்கியமல்ல. கொரோனா கிருமித்தொற்றை முறியடிப்பதே அதிமுக்கியமானது.
"அண்டை நாடுகள், வட்டார நாடுகள், உலக நாடுகள் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா கிருமித்தொற்றை முறியடிக்க வேண்டும்.
"கிருமித்தொற்றுக்கு எதிரான செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
"திட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்த வேண்டும்.
"அரசியல் தொடர்பான பணிகள் தானாகவே நடக்கும்," என்று அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

