உலக நாடுகளை கொரோனா கிருமித்தொற்று வாட்டி வரும் வேளையில் வெளிநாடுகளில் மாணவர் பரிமாற்றத் திட்டம் அல்லது வேலை அனுபவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர் மாணவர்கள் தாயகம் நோக்கி விரைகின்றனர். சிலர் சிங்கப்பூர் வந்தடைந்துவிட்டனர். எஞ்சியிருப்போர் விமானப் பயணச்சீட்டு வாங்க விரைகின்றனர்.
அடுத்த சில மாதங்களில் தங்களுக்காக தங்களது கல்வி நிலையங்கள் என்ன திட்டம் வகுத்துள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள அவர்கள் முயன்று வருகின்றனர். ஜூலை மாதம் இறுதி வரை மாணவர்களுக்கான அனைத்து வெளிநாட்டுத் திட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆசியான் நாடுகள், ஜப்பான், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் தங்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது. இது நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிருமித்தொற்றைக் குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

