வெஸ்ட் கோஸ்ட் உணவங்காடி நிலையத்தில் திரு ரெஷி குமார் தென்னரசு இருந்தபோது, தனது மனைவி உடற்குறையுள்ளோர் பயன்படுத்தும் கழிவறையில் முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆடவருடன் மாட்டிக்கொண்டார் என்று ஒருவர் உதவி கேட்டார்.
உடனே செயலில் இறங்கிய ரெஷி, கழிவறையின் 2 மீட்டர் உயரமுள்ள சுவரில் தாவி ஏறி, கழிவறைக்குள் புகுந்து, அந்த ஆடவரை பெண்ணிடமிருந்து ஒதுங்கியிருக்குமாறு சொல்லி, கழிவறைக் கதவைத் திறந்தார்.
போலிஸ் அங்கு வந்து சேர்ந்ததுடல் அந்த ஆடவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், திரு ரெஷியின் உதவியுடன் அவர் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அந்த ஆடவர் மானபங்கச் செயலுக்காக கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் உதவி தேவைப்பட்டோருக்குத் தக்க நேரத்தில் உதவிக்கரம் நீட்டியதற்காக திரு ரெஷிக்கு நேற்று பொது உணர்வு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அதை அவருக்கு வழங்கிய கிளமெண்டி போலிஸ் பிரிவின் தலைவர் உதவி ஆணையாளர் ஜெரோட் பெரேரா பேசுகையில், "குடிமை உணர்வுடனும் தைரியத்துடனும் செயல்பட்டார் திரு ரெஷி. அவரது செயல் சமூகத்தில் உள்ளவர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறது," என்றார்.
திரு ரெஷியுடன் மேலும் ஐந்து நிறுவனங்களுக்கு சமூக பங்காளித்துவ விருதும் கிளமெண்டி போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற அதே நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
கம்ஃபர்ட்டெல்குரோ, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, குவீன்ஸ்டவுன் துடிப்பான முதியோர் குழு, உலு பாண்டான் துடிப்பான முதியோர் குழு, ஷங்ரிலா ராசா செந்தோசா உல்லாசத் தளம் ஆகியவை குற்றத் தடுப்புத் திட்டங்களை அமல்படுத்துவதற்கு கிரமெண்டி போலிஸ் தலைமையகத்துடன் அணுக்கமாகச் செயல்பட்டதற்கு விருது பெற்றன.
"குற்றத்தடுப்பு முயற்சிகளில் போலிசுக்கும் சமூக பங்காளிகளுக்கும் இடையே நிலவும் வலுவான ஒத்துழைப்புக்கு மதிப்பளிக்கிறோம். அதன் காரணமாகத்தான் சிங்கப்பூர் வாழ்வதற்கு பாதுகாப்பான இடமாகத் திகழ்கிறது," என்றும் உதவி ஆணையாளர் ஜெரோட் பெரேரா தெரிவித்தார்.

