சிங்கப்பூருக்குள் வரும் சிங்கப்பூரர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு 14 நாள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். இன்று இரவு 11.59 மணி முதல் இது நடப்புக்கு வருகிறது.
இந்நிலையில் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் அனைவருக்கும் அது தொடர்பான அறிவுறுத்தல்களை அறிந்திருத்தல் அவசியம்.
உத்தரவு பிறப்பிக்கப்படுவோர் 14 நாட்களில் எல்லா நேரத்திலும் வீட்டிலேயே இருக்கவேண்டும். தடைக்காப்பு ஆணையிலிருந்து இது சற்று வேறுபடும். தடைக்காப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டால், தனி அறை மற்றும் கழிவறை ஆகியவற்றில் தான் இருக்க முடியும்.
உணவு அல்லது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வெளியே செல்லவேண்டாம்; விநியோகச் சேவைகளைப் பயன்படுத்தவும் அல்லது அண்டைவீட்டார்/அடித்தள அமைப்புகளின் உதவியை நாடலாம். பிறருடன் தொடர்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுவோர் தண்டனைக்கு ஆளாவர். முதல் முறை குற்றம் புரிவோருக்கு $10,000 அபராதம் அல்லது 6 மாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

