சிங்கப்பூரில் பொருளியல் மந்தநிலை தவிர்க்க முடியாதது எனக் கூறிய டிபிஎஸ் வங்கி, இவ்வாண்டு பொருளியல் 0.5 விழுக்காடு சுருங்கும் என முன்னுரைத்துள்ளது. கடந்த மாதம் முன்னுரைக்கப்பட்ட 0.9 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டிலும் இது நேர்மாறானது.
கொரோனா கிருமிப்பரவல் மேலும் மோசமடைந்தால் பொருளியல் மேலும் மந்தமடையும் அபாயம் இருப்பதாக அந்த வங்கியின் பொருளியல் நிபுணர் எர்வின் சியா, தமது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாண்டின் மொத்த ஆட்குறைப்பின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 24,500ஐ எட்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இந்த எண்ணிக்கை, அனைத்துலக நிதி நெருக்கடி சமயமான 2009ல் இருந்த 23,430ஐ காட்டிலும் அதிகம்.
"உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் அமளியையும் வர்த்தகம், முதலீடு, பயணம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் கருத்தில்கொள்ளும்போது இது சுயமாக உண்டாக்கப்பட்ட உலகளாவிய பொருளியல் மந்தநிலையைப் போல உள்ளது.
"சிறிய, வெளிப்படைத்தன்மையான பொருளியலைக் கொண்ட சிங்கப்பூர் இதிலிருந்து தப்ப முடியாது," என்றார் திரு சியா.
$14 பில்லியன் முதல் $16 பில்லியன் வரையில் மதிப்பிலான இரண்டாவது ஆதரவுத் திட்டம் அறிவிக்கப்படலாம் என்று திரு சியா கூறினார்.
இதற்கு முன் நிலைத்தன்மை மற்றும் ஆதரவுக்கான 4 பில்லியன் வெள்ளி மதிப்பிலான திட்டம் கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரவுசெலவு திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
குறையும் பணவீக்கம், பொருளியல் மந்தத்திற்கான அபாயம் ஆகியவற்றுக்கு எதிராக சிங்கப்பூர் நாணய ஆணையம் மேலும் கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் என திரு சியா எதிர்பார்க்கிறார்.

