சிங்கப்பூரில் சென்ற ஆண்டு ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் வேலை வாய்ப்புகள் குறைந்தன. இருந்தாலும் வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் இன்னமும் பல வாய்ப்புகள் இருப்பதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்து இருக்கிறார்.
ஆயினும் கொரோனா கிருமித்தொற்று சூழலில் நிச்சயமில்லாத நிலை தொடரும் என்பதால் வேலை வாய்ப்புகள் மேலும் குறையக் கூடும் என்று அவர் எச்சரித்தார்.
முதலாளிகளிடையே ஊழியர்களை வேலையில் சேர்க்கும் ஆர்வம் குறைந்து இருக்கிறது. இதன் விளைவாக வேலை தேடுவோர் மேலும் சவால்மிக்க காலத்தை எதிர்நோக்குவார்கள் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் திருவாட்டி டியோ தெரிவித்துள்ளார்.
மனிதவள அமைச்சு 2019 வேலை வாய்ப்புகள் பற்றிய அறிக்கையை நேற்று வெளியிட்டது. அது பற்றி அமைச்சர் கருத்து கூறினார். நிச்சயமில்லாத நிலையில் பொருளியல் இருந்தாலும் முதலாளிகள் தொழில்களை விரிவு படுத்துவதன் மூலமாகவும் உருமாற்றுவதன் வழியாகவும் புதிய வேலைகளை உருவாக்கி வருகிறார்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
சென்ற செப்டம்பரில் 52,900 வேலை வாய்ப்புகள் இருந்தன. அவற்றில் மொத்தம் 42 விழுக்காடு முதலாளிகள் உருவாக்கியதாகும். இந்த ஆண்டைப் பொறுத்த வரையில், கூடுமானவரையில் அதிகமான ஊழியர்கள் தங்கள் வேலைகளில் நிலைத்து இருப்பதை உறுதிப்படுத்துவதில் ஒருமித்த கவனம் இடம்பெற வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதில் பொருத்தமானவர்களுக்குப் பொருத்தமான வேலையைப் பெற்று தர முடியும் என்றும் அவர் கூறினார். வேலைகளையும் ஊழியர்களையும் பாதுகாப்பதே சென்ற மாதம் அறிவிக்கப்பட்ட $4 பில்லியன் நிலைப்பாடு மற்றும் ஆதரவு திட்டத்தின் மிக முக்கிய நோக்கம் என அவர் சுட்டினார்.
கட்டுமானம், தகவல்தொடர்பு தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் புலன்விசாரணை ஆகிய துறைகளில் சென்ற ஆண்டில் புதிய வேலை வாய்ப்புகள் உருவானதாக மனிதவள அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அறிக்கை, சுமார் 15,300 தனியார் மற்றும் பொதுத்துறை அமைப்புகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
நிபுணத்துவச் சேவைகள், நிதி மற்றும் காப்புறுதிச் சேவைகள், மொத்த வர்த்தகம், சுகாதாரப் பராமரிப்பு ஆகிய தொழில்துறைகளும் வளர்ச்சி கண்டு வருவதாக அரசாங்கம் அடையாளம் கண்டு இருக்கிறது. தொழில்துறைச் சூழல் மெதுவாக இருக்கையில் அரசாங்கம் முதலாளிகளுடன் சேர்ந்து செயல்பட்டு ஊழியர்களுக்குப் புதிய தேர்ச்சிநிலையை அளித்து அவர்களைப் புதிய வேலைகளுக்குத் தயார்ப்படுத்த விரும்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

