மின்-ஸ்கூட்டர் ஓட்டிய ஒருவரை அமலாக்கப் பிரிவு அதிகாரி எட்டி உதைத்ததாக பொய்ச் செய்தி பரவுவதாகவும் போலிசார் அது குறித்து விசாரித்து வருவதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
ஓர் அமலாக்கப் பிரிவு அதிகாரி, அருகில் ஓர் ஆடவர் விழுந்து கிடப்பது ஆகியவற்றைக் காட்டும் புகைப்படங்களுடன் இந்த பொய்யான குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகலில் நிகழ்ந்ததாகச் சொன்ன ஆணையம், சம்பவம் பற்றி இணையத்தில் பரவும் தகவலைச் சுட்டி, "கண்டுபிடிக்கப்படாத ஒன்று, பொய்," என்று குறிப்பிட்டது.
ஈசூனில் விதிமுறைகளை மீறியதாக அமைந்த மின்-ஸ்கூட்டர் ஒன்றை நடைபாதையில் ஒருவர் ஓட்டிச் சென்றதை ஆணையத்தின் அதிகாரிகள் கண்டனர்.
வண்டியை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை செய்ததற்குப் பணியாமல் மின்-ஸ்கூட்டர் ஓட்டி தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி வண்டியிலிருந்து விழுந்தார் என்று ஆணையம் விளக்கம் அளித்தது.
"அந்த ஆடவரின் தகவல்களை அதிகாரிகள் பெற்றுக்கொண்ட சமயம், அவர் மீண்டும் தப்பியோட முயற்சி செய்தார். அப்போது மற்றோர் அதிகாரி அந்த ஆடவர் ஓடிவிடாமல் பிடித்தார். அந்த நடவடிக்கையில் இருவரும் கீழே விழுந்தனர்," என்றது ஆணையம்.

