சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் நேற்றுக் காலை மரணம் அடைந்தனர். கொரோனா தொற்றால் சிங்கப்பூரில் முதன்முதலில் பதிவான மரணங்கள் இவைதான்.
நாட்பட்ட இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருந்த 75 வயது சிங்கப்பூர் மூதாட்டி ஒருவர் நேற்றுக் காலை 7.52 மணிக்கு உயிரிழந்தார்.
நிமோனியா பிரச்சினையால் கடந்த மாதம் 23ஆம் தேதி அப்பெண்மணி தேசிய தொற்றுநோய்த் தடுப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அதே நாளிலேயே கிருமித்தொற்றாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது. 26 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிறகு அவரது உயிர் பிரிந்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அந்தப் பெண்மணி, சிங்கப்பூரில் கிருமி தொற்றிய 90வது ஆள். பாய லேபாரில் உள்ள 'தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ் சிங்கப்பூர்' தேவாலயத்துடன் இவருக்குத் தொடர்பிருந்தது. அந்த சமய வழிபாட்டுத் தலத்துடன் தொடர்புடையவர்களில் இதுவரை பத்துப் பேரை கிருமி தொற்றிவிட்டது.
கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் மாண்டுபோன இரண்டாமவர் 64 வயது இந்தோனீசியர். இம்மாதம் 13ஆம் தேதி இந்தோனீசியாவில் இருந்து சிங்கப்பூர் வந்திறங்கிய அவர், மோசமான உடல்நலக் குறைவு காரணமாக அன்றைய நாளே தொற்றுநோய்த் தடுப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு மறுநாள் அவரையும் கிருமி தொற்றியிருந்ததை மருத்துவச் சோதனைகள் உறுதிப்படுத்தின. ஒன்பது நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் நேற்றுக் காலை 10.15 மணிக்கு மரணத்தைத் தழுவினார்.
இங்கு வருவதற்குமுன், நிமோனியாவுக்காக இந்தோனீசிய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். அவருக்கு இதய நோய் இருந்ததாகவும் கூறப்பட்டது.
"இருவரின் மரணத்தால் வருத்தம் அடைந்துள்ளோம். இந்தச் சிரமமான நேரத்தில் அவர்களது குடும்பங்களை எண்ணி மனம் வாடுகிறோம். அவர்களின் குடும்பத்தாருக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம்," என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
இருவரின் மரணச் செய்தி சிங்கப்பூரர்களைத் துயரினில் ஆழ்த்தி இருக்கும் என்பதை அறிந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் கான், ஆனாலும் துணிச்சலுடன் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் தொடர்ந்து பங்காற்றும்படி சிங்கப்பூரர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
மக்கள் தங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளி உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி திரு கான் வலியுறுத்தினார்.
இதனிடையே, மாண்ட இருவரின் குடும்பத்தாருக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். அத்துடன், இதுநாள் வரை அவ்விருவரையும் அக்கறையுடன் கவனித்துக்கொண்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை அவர்களின் மரணம் துயரினில் ஆழ்த்தி இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அதிபர் ஹலிமா, ஆனாலும் அந்த ஊழியர்கள் மனந்தளர்ந்துவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல, மரணமடைந்த இருவரின் குடும்பத்தாருக்கும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"கொரோனா கிருமித்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதிகமான நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவின் பராமரிப்பு தேவைப்படலாம். அதே வேளையில், அதிகமான உயிர் இழப்புகளை எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருக்கவேண்டும்," என்று பிரதமர் லீ கூறியுள்ளார்.
தங்களுடைய நோயாளிகளை நன்கு கவனித்துக்கொள்ள தங்களால் ஆன அனைத்தையும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் செய்து வருவதாக திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
"கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் நேற்று முன்தினம் வரை 135 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இன்னும் பலர் படிப்படியாகத் தேறி வருகின்றனர். கிருமிப் பரவலைத் தடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஆனாலும், அதற்கு ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை. அனைவரும் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும்," என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நம்மை, நம் குடும்பங்களை, நம் நாட்டைப் பாதுகாக்க வைத்திருக்க நாம் எல்லாரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தி இருக்கிறார்.

