சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் மோசமடைந்து வரும் வேளையில் சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் கிருமி பரவாதிருப்பதற்கான முக்கிய வழிகாட்டிகளை வெளியிட்டது. அவற்றில் ஒன்றாக, 250க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடும் எல்லா நிகழ்ச்சிகளும் ஜூன் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்பில் ஏற்கெனவே இம்மாதம் முதல் கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் பாதிக்கப்படுமா என்று தமிழ் முரசு இந்து அறக்கட்டளை வாரியத்திடமும் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்டது. புதிய விதிமுறைகளைப் பின்பற்றுகையில், கோவில் திருமணங்கள் தொடர்ந்து தங்களது வளாகத்தில் நடைபெறலாம் என்று இருத்தரப்பினரும் தெரிவித்தனர். ஆனால் தங்களது விருந்தினர் பட்டியலை 250 ஆகக் குறைப்பதற்குத் தம்பதியினர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். உதாரணத்திற்கு, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பிஜிபி கல்யாண மண்டபத்தில் எந்நேரமும் ஒரு மாடியில் 250க்கும் மேற்பட்டோர் கூடாமல் இருப்பது கண்காணிக்கப்படும். அதோடு அங்கு ஒவ்வொருவருக்கும் போதிய இடைவெளி இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் கல்யாண மண்டபத்தில் அமரும் இருக்கைகளில் இடைவெளி இருக்கும். சில இருக்கைகளில் அமரக்கூடாது என்ற ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டிருக்கும். இதற்கு மேலாக உணவு மண்டபத்தில் ஒவ்வொரு மேசையின் இடைவெளி அதிகரிக்கப்படுவதோடு அதிகபட்சமாக ஆறு நாற்காலிகள் மட்டுமே ஒவ்வொரு மேசையிலும் இருக்கும். தம்பதியினர் தங்களது திருமணத்தைத் தள்ளிவைப்பதாக இருந்தால் அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்று அதன் வளாகத்தில் நடந்த திருமணங்கள் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சுமுகமாக நடந்தேறியதாக தேங் ரோடு கோயிலின் நிர்வாகக் குழு தலைவர் திரு வீ.ஆர்.விஸ்வநாதன் குறிப்பிட்டார். உடல் வெப்பநிலையைச் சோதித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கெனவே நடப்பில் உள்ளதாகவும் அவர் சொன்னார். இன்று அக்கோயில் கல்யாண மண்டப வளாகத்தில் ஒரு திருமணம் நடக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அத்திருமணத்தை ஏற்பாடு செய்த தம்பதியினர் அதனை இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளனர். "அவர்கள் கிட்டத்தட்ட 600 விருந்தினர்களை அழைத்திருந்ததால் கடைசி நிமிடத்தில் எண்ணிக்கையைக் குறைப்பது சாத்தியம் இல்லை என்றார்கள். ஒவ்வொருவருக்கும் இடையிலான இடைவெளியை நிலைநாட்டுவதும் சிரமமாக இருக்கும் என்று பகிர்ந்து கொண்டனர்," என்றார் திரு விஸ்வநாதன். இதற்கிடையே புதிய விதிமுறைகள் குறித்து, தங்களது வளாகத்தில் திருமணம் செய்ய பதிவுசெய்திருக்கும் தம்பதிகளுக்கு அக்கோயில் நிர்வாகம் மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தொடர்புகொண்டு தெரிவித்து வருகிறது.
'கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் கோவிலில் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறலாம்'
2 mins read

