சீனாவின் வூஹான் நகரில்தான் கொவிட்-19 கிருமித்தொற்று தொடங்கியது. அங்கு பலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்ததை அடுத்து அங்கிருந்து சிங்கப்பூரர்கள் பலர் வெளியேறினர். ஆனால் சிங்கப்பூரரான 44 வயது திரு ஜான் பெங் வூஹானைவிட்டு வெளியேறவில்லை.
மாறாக, வூஹானில் ஃபிரேசர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மொடேனா பை ஃபிரேசர்ஸ் எனும் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பின் தலைமை நிர்வாகியான திரு பெங், அங்கேயே இருந்து அங்கு வசித்த விருந்தினர்களைக் கவனித்துக்கொண்டு வருகிறார்.
சிங்கப்பூருக்குத் திரும்புமாறு அவரது முதலாளியும் குடும்பத்தினரும் கேட்டுக்கொண்டபோதிலும் அவர் வூஹானிலே இருக்கிறார். இந்நிலையில், காணொளி அழைப்பு மூலம் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசினார்.
"எனக்கு ஒரே ஓர் இலக்கு மட்டுமே இருந்தது. குடியிருப்பில் இருந்த அனைத்து விருந்தினர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது முக்கிய நோக்கமாக இருந்தது. உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் என்னவாகும்? விருந்தினர்களையும் ஊழியர்களையும் பார்த்துக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன்," என்று திரு பெங் தெரிவித்தார்.
அந்தக் குடியிருப்பில் வசித்த 90 பேரில் பலர் தற்போது வூஹாவைவிட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு பெங்கின் மனைவியும் அவரது மூன்று வயது மகனும் வூஹானிலிருந்து திரும்பிவிட்டனர். ஆனால் வூஹானைவிட்டு வெளியேறும் திட்டம் தமக்கு இல்லை என்று திரு பெங் தெரிவித்துள்ளார்.

