கொரோனா கிருமித்தொற்று மோசமடைந்து வரும் வேளையில் நியூசிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர இருநாடுகளும் கடப்பாடு கொண்டுள்ளன.
இதற்கு ஏதுவாக நடப்பில் இருக்கும் வர்த்தகக் கட்டுப்பாடுகளை நீக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட இருக்கின்றன.
வர்த்தக இடையூறுகளை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ள இருநாடுகளும் மிக அணுக்கமாகச் செயல்படும் என்று சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும் நியூசிலாந்தின் வர்த்தக, ஏற்றுமதி வளர்ச்சி அமைச்சர் டேவிட் பார்க்கரும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்தனர்.
தடையில்லா வர்த்தகம் இருநாடுகளுக்கும் பலனைத் தரும் என்று இரு அமைச்சர்களும் கூறினர்.
கொரோனா கிருமிப் பரவல் மோசமடைந்ததை அடுத்து உலகெங்கும் வர்த்தகங்கள் தடைப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வருவதில் எவ்வித பாதிப்பும் இல்லை என அமைச்சர் சான் பலமுறை தெரிவித்துள்ளார். இருப்பில் உள்ள அத்தியாவசிப் பொருட்களை அதிகரிப்பது, குறிப்பிட்ட சில நாடுகளை மட்டும் நம்பியிருக்காமல் மேலும் பல நாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது ஆகியவை தொடர்பான சிங்கப்பூர் மறுஆய்வு செய்து வருவதாக அவர் இம்மாதம் துவக்கத்திவ் தெரிவித்திருந்தார்.

