சிங்கப்பூரில் பணிபுரியும் பணிப்பெண்கள் தங்கள் ஓய்வு நாட்களில் வீட்டிலேயே இருப்பது நல்லது என்று மனிதவள அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றைக் கருத்தில் கொண்டு அமைச்சு இவ்வாறு கூறியுள்ளது.
அப்படியே ஓய்வு நாட்களில் பணிப்பெண்கள் வெளியே சென்றாலும் மற்றவர்களுடனான தூர இடைவெளியை அவர்கள் அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தியது.
"சொந்த பணிகள் காரணமாக வெளிநாட்டுப் பணிப்பெண்கள் வெளியே செல்லும் தேவை ஏற்பட்டால் ஓய்வு நாட்களை வாரநாட்களில் எடுத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் பொது இடங்களில் கூட்டமாக இருக்காது.
"வார நாட்களில் வீட்டிலேயே இருக்க பணிப்பெண்கள் இணங்கினால் அந்த நாட்களில் முதலாளிகள் அவர்களை வேலை செய்ய சொல்லக்கூடாது.
"ஓய்வு நாட்கள் வேண்டாம் என்று கூறி வேலை செய்யும் பணிப்பெண்களுக்கு அதற்கான ஊதியத்தை முதலாளிகள் கொடுக்க வேண்டும்," என்று அமைச்சு கூறியது.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவருக்கொருவர் இடையிலான தூர இடைவெளியை அதிகரிக்கும் அணுகுமுறையை சிங்கப்பூர் நடைமுறைப்படுத்தும் என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்தது.
"மற்றவர்களுக்கு மிக அருகில் இருப்பது, கும்பல்களாக இருப்பது போன்றவற்றைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சு தெரிவித்தது.
ஓய்வு நாட்களில் வெளியே செல்லும் பணிப்பெண்கள் லக்கி பிளாசா, சிட்டி பிளாசா, பெனின்சுலா பிளாசா போன்ற இடக்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சு கூறியது.
அதுமட்டுமல்லாது, சுகாதாரமிக்க பழக்கவழக்கங்களைப் பணிப்பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மற்றவர்களுடன் உணவு, பானம் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் அமைச்சு கூறியது.
"பணிப்பெண்கள் பொறுப்புடன் இருந்து தங்கள் உடல்நலத்தைக் கண்காணித்துக்கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். நோய்வாய்ப்பட்டால் வெளியே செல்லக்கூடாது. கிருமிப் பரவலை இது தடுக்கும்," என்று அமைச்சு கூறியது.

