பயணம் தொடர்பான அறிவுறுத்தல்களையும் மீறி வெளிநாடுகளுக்குச் செல்வோர் கூடிய விரைவில் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
எல்லைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும் சமயத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வோருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். "இதனை நாம் இனியும் அனுமதிக்கக்கூடாது. இதற்குத் தேவையான கூடுதல் நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்," என்றார் அவர்.
மேலும், இப்போது நிலவும் சூழலில் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போர் வெளிநாடு சென்றால் அவர்கள் அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் என்றும் மீண்டும் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கும் நிலை வரும் என்றும் திரு வோங் கூறினார்.
"மக்கள் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கான காரணங்கள் புரியவில்லை. தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் சரி. இருப்பினும் நாடு திரும்பும் சிங்கப்பூரர்களால் கிருமி பரவக்கூடிய நிலையை இனியும் நாம் சந்திக்க இயலாது.
"இப்போது வரை இதனை நாம் சகித்துக்கொண்டு உள்ளோம். வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சிங்கப்பூரர்களால் அடுத்தடுத்து மூன்றாவது அல்லது நான்காவது என்று கிருமித்தொற்று சம்பவங்கள் உருவானால் அது நமக்கு மிகுந்த சவாலாக அமைந்துவிடும்," என்றார் அவர்.
கடந்த வாரத்தில் அதிகமான கிருமித்தொற்று சம்பவங்கள் வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடையவை என்று தெரியவந்ததைத் தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அண்மை நாட்களாக சிங்கப்பூரில் அறிவிக்கப்பட்ட புதிய நோயாளிகளில் பலர் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசியாவின் இதர பகுதிகளுக்குச் சென்று திரும்பிய சிங்கப்பூர்வாசிகள் மற்றும் நீண்டகால அனுமதி அட்டைதாரர்கள்.

