இவ்வாண்டு சிங்கப்பூரில் 4,000க்கும் மேற்பட்டோர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில்தான் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆனால் இம்முறை அதற்கு முன்பாகவே டெங்கியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிங்கப்பூரில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை அதிகமாக இருப்பது அதில் ஒன்றாகும். அதுமட்டுமல்லாது, கூடுதல் மழையின் காரணமாக ஏடிஸ் வகை கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.
மேலும் அரிய வகை டெங்கி கிருமித்தொற்றும் அதிகரித்துள்ளது.
"டெங்கி பாதிப்பு அதிகம் ஏற்படும் காலகட்டத்துக்கு முன்பாகவே இந்நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நம் அனைவருக்கும் கவலை தரும் விஷயமாக இருக்கிறது.
"அடுத்த சில மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் டெங்கியால் பாதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்," என்று அங் மோ கியோவில் நேற்று நடைபெற்ற தேசிய டெங்கி தடுப்பு இயக்கத்தின் அறிமுக விழாவில் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இந்த வருடாந்திர இயக்கம் பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கும்.
ஆனால் இவ்வாண்டு நிலைமை மோசமாக இருப்பதால் அது முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து வாரத்துக்கு 300லிருந்து 400 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் தற்போது டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ள 100 குழுமங்கள் உள்ளன.
அவற்றில் 28 குழுமங்கள் மிகவும் மோசமான சிவப்பு விழிப்புநிலை குழுமங்களாக இருக்கின்றன. அந்தக் குழுமங்களில் குறைந்தது 10 பேருக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தின் சில பகுதிகள், அங் மோ கியோ அவென்யூ 10 ஆகிய வட்டாரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் டென்வி3- டெங்கி கிருமித்தொற்றால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் அவ்வகை கிருமிக்கு எதிரான எதிர்ப்பு சக்தி சிங்கப்பூரர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதாக அமைச்சர் மசகோஸ் கூறினார்.
இனி இந்த வகை டெங்கி கிருமித்தொற்று அதிக பாதிப்பை
ஏற்படுத்துமா என்பது குறித்து இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், நிலைமையை தேசிய சுற்றுப்புற வாரியம் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

