சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனம் அதன் 25 மலேசிய ஊழியர்களுக்கு பரிவுத் திட்ட பொட்டலங்களை நேற்று முன்தினம் வழங்கியது. எஸ்பிஎச்சின் அச்சுப் பிரிவில் பணிபுரியும் அந்த மலேசிய ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாகி ஆண்டனி டான் பரிவுத் திட்ட பொட்டலங்களை வழங்கினார்.
பரிவுத் திட்ட பொட்டலங்களில் அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றுச்சீட்டுகள், கிருமி நாசினி, பிஸ்கட், மைலோ பொட்டலங்கள் இருந்தன.
மலேசியாவில் இரண்டு வாரங்களுக்கு பகுதி முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து எஸ்பிஎச்சின் மலேசிய ஊழியர்களில் பலர் ஸ்டீவன்ஸ் சாலையில் உள்ள மெர்கியோர் சிங்கப்பூர் ஹோட்டலில் தங்கி வருகின்றனர்.
"முடக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகி குறுகிய காலகட்டத்தில் பல நாட்களுக்குக் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வேலையைத் தொடர முடிவெடுப்பதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் எளிதான காரியமல்லை. எங்கள் மலேசிய ஊழியர்களின் தியாகம் மிகப் பெரிது," என்றார் திரு டான்.
இந்த ஊழியர்களுக்கு நாள்தோறும் $30 படித்தொகை வழங்க எஸ்பிஎச் முடிவெடுத்துள்ளது.

