அரசாங்கத்திடமிருந்து கூடுதல் ஆதரவை சிங்கப்பூர் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இரண்டாவது பொருளியில் ஊக்குவிப்புத் திட்டத்துக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஊக்குவிப்புத் திட்டம் இதற்கு முன் அறிவிக்கப்பட்டதைவிட பெரிதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக உலகப் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து உள்ளூர் வர்த்தகர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது வர்த்தகங்களுக்கு ஆதரவு அளிக்க $4 பில்லியன் பொருளியல் ஊக்குவிப்புத் தொகையை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார். இரண்டாவது பொருளியல் ஊக்குவிப்புத் திட்டத்தின் தொகை அதற்கு ஈடாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்க வேண்டும் என்று இம்மாதம் 13ஆம் தேதியன்று சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த வர்த்தகர்களில் 73 விழுக்காட்டினர் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஊக்குவிப்புத் தொகை உடனடியாகவோ அல்லது ஒரு மாதத்துக்குள்ளாகவோ வழங்கப்பட வேண்டும் என்று ஆய்வில் பங்கெடுத்த 188 வர்த்தகர்களில் பாதி பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக சம்மேளனம் கூறியது.
அவர்களுக்கு அந்த நிதி அவசரமாக தேவைப்படுவதை இது காட்டுவதாக அது தெரிவித்தது.
ஆய்வின் கண்டுபிடிப்புகளைத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் ஆகியோருடன் சம்மேளனம் பகிர்ந்துகொண்டது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சம்மேளனம் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் திரு ஹெங், திரு சான் ஆகியோருடன் 40 வர்த்தகத் தலைவர்கள் கலந்துரையாடினர்.

