கொரோனா கிருமித்தொற்று உலகப் பொருளியலை இன்னும் அதிக காலத்துக்குக் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கும் என்ற அச்சம், இன்று (மார்ச் 23) சிங்கப்பூர் பங்குச்சந்தையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (எஸ்டி) குறியீட்டை 8.4% வீழ்ச்சியடைய வைத்தது.
இதற்கு முன் ஆக மோசமான பங்குச்சந்தை வீழ்ச்சியாக 2008ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று ‘எஸ்டி’ குறியீடு 8.3% சரிந்தது.
சிங்கப்பூர் பங்குச்சந்தையின் வர்த்தகம் இன்று தொடங்கியபோதே ‘எஸ்டி’ குறியீடு 7.9% சரிவு கண்டது.
பிற்பகல் 1.10 மணியளவில், ஆசியாவின் மிக மோசமான சரிவாக ‘எஸ்டி’ குறியீடு 7.3% என்ற நிலையில் இருந்தது.
ஜென்டிங் சிங்கப்பூர் பங்குகள் 9.48% அல்லது 5.5 காசு சரிந்து 52.5 காசு ஆனது.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் பங்குகள் 9.47% அல்லது 57 காசு சரிந்து $5.45 ஆனது.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்று காரணமாக விமானப் பயணக் கட்டணங்களும் விடுமுறை செலவுகளும் சரிவு கண்டதால், கடந்த மாதத்தில் சிங்கப்பூரின் மூல பணவீக்கம் பத்து ஆண்டுகளில் முதல் முறையாக வீழ்ச்சி கண்டது.
தங்கும் வசதி, தனியார் சாலைப் போக்குவரத்து ஆகியவற்றைத் தவிர்த்த மூல பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் பிப்ரவரி மாதத்தில் -0.1% சரிந்தது.
ஜனவரியில் அது 0.35ஆக இருந்தது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட -0.5% சரிவுக்குப் பிறகு இதுதான் ஆக மோசமான மூல பணவீக்கச் சரிவு.
ஒட்டுமொத்த பணவீக்கமும் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் பிப்ரவரி மாதத்தில் 0.3% ஆனது. ஒப்புநோக்க ஜனவரி மாதத்தில் அது 0.8% ஆக இருந்தது.
விமானப் பயணக் கட்டணங்கள், விடுமுறை செலவுகள் ஆகியவற்றில் சரிவு ஏற்பட்டதால், சேவைகள் தொடர்பான செலவுகள் பிப்ரவரியில் -0.4% ஆக இருந்தது. ஒப்புநோக்க ஜனவரியில் அது 0.5% ஆக இருந்தது.
கார் மற்றும் பெட்ரோல் கட்டணங்களில் சிறிது ஏற்றம் தென்பட்டதால், தனியார் போக்குவரத்து பணவீக்கம் பிப்ரவரியில் 2.4% குறைந்தது. ஜனவரியில் அது 4.6% ஆக இருந்தது என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டது.
#சிங்கப்பூர் #பங்குச்சந்தை #பணவீக்கம் #தமிழ்முரசு