சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் நேற்று பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இவற்றில் தரவுப் புத்தாக்கம், மின்னிலக்கப் பொருளியல் ஆகிய துறைகளும் அடங்கும். சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர்களின் வருடாந்திர சந்திப்பு இவ்வாண்டு ஐந்தாவது முறையாக நடந்தது. கொரோனா கிருமித்தொற்று அபாயம் அதிகரித்திருப்பதால் நேரில் சந்திக்காமல் காணொளி அழைப்பு மூலம் தொடர்புகொள்ள இருநாட்டுத் தலைவர்களும் முடிவெடுத்தனர்.
அதன்படி ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனை காணொளி அழைப்பு மூலம் பிரதமர் லீ சியன் லூங் தொடர்பு கொண்டு பேசினார்.
"இவ்வாண்டு நான் ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. ஆனால் கொரோனா கிருமித்தொற்று உலக நாடுகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று.
"ஆனால் கிருமித்தொற்று காரணமாக இருநாட்டு அதிகாரி
களின் சந்திப்பு தடைப்படவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் நேரில் சந்தித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து அதற்குப் புத்தாக்க முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. காணொளி அழைப்பு மூலம் தொடர்புகொண்டு பேசினோம்," என்றார் பிரதமர் லீ.
உலகெங்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளபோதிலும் இன்றைய மின்னிலக்கச் சூழலில் அரசாங்கப் பணிகள் தொடரலாம் என்பதற்கு இந்தக் காணொளி ஆழைப்பு ஓர் உதாரணம் என்றார் திரு லீ.
கொரோனா கிருமித்தொற்று பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளபோதிலும் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்த சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் கடப்பாடு கொண்டுள்ளதை இது காட்டுவதாக அவர் கூறினார்.
பிரதமர் லீயின் இந்தக் கருத்துகளை ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆமோதித்தார். கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள சிங்கப்பூர் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.
சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராணுவப் பயிற்சித் தளம் தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பு ஒப்பந்தமாக மேம்படுத்தப்பட்டது.
புதிய ஒப்பந்தப்படி ஷோல்வாட்டர் பே பயிற்சித் தளமும் புதிய கிரீன்வேல் பயிற்சித் தளமும் விரிவாக்கப்படும்.
இந்தத் தளங்களுக்கான விரிவாக்கப் பணிகள் 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதளங்களின் பரப்பளவு சிங்கப்பூரைவிட பத்து மடங்கு பெரிது.
செயற்கை நுண்ணறிவு ஆற்றல் மற்றும் வர்த்தகமயமாக்குதல் போன்ற மின்னிலக்கப் பொருளியல் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.
இணையப் பாதுகாப்பு, தரவுப் புத்தாக்கம் போன்ற துறைகளில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்.
கொரோனா கிருமித்தொற்று தொடர்பான பிரச்சினையை சிங்கப்பூர் எதிர்கொள்ளும் விதம் குறித்து உலக நாடுகள் பாராட்டி வரும் வேளையில் பிரச்சினை
ஓய்ந்துவிட்டது என்று எண்ணி அரசாங்கம் மெத்தனத்துடன் இருக்கவில்லை என்றார் பிரதமர் லீ. நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
"கொஞ்சம் கவனம் சிதறினாலும் மிகவும் அபாயகரமான நிலை ஏற்படக்கூடும். அத்தகைய நிலைமை நமக்கு எப்போது வேண்டு மானாலும் நிகழலாம்.
"கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்து கொரோனா கிருமித்தொற்று நீண்டகாலத்துக்குத் தொடரும் என மக்கள் எதிர்பார்க்க வேண்டும்," என்று பிரதமர் லீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

