கனரக லாரி ஒன்றில் ஏறிச் சென்ற ஓர் ஆடவர், அந்த ஓட்டுநரின் உறவினர் ஒருவரின் முதுகில் மிருகம் ஒன்றின் கொம்புகளால் குத்தியதில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. ஓட்டுநரான 43 வயது திரு சிவகுமார் பெருமாளின் முகத்தில் அந்த கொம்புகள் இடித்தன. திரு சிவகுமாரின் இடது கண்ணில் குத்திய கொம்புகள் அவரது மூளையைத் துளைத்ததைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் தொடர்பில், திரு சிவகுமார் பெருமாளுடன் முன்பு பணியாற்றிய 33 வயது சரவணன் அரிமுரம் (படம்) மீது முதலில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தாம் கண்மூடித்தனமாக நடந்துகொண்டதை ஒப்புக்கொண்ட சரவணனுக்கு ஓராண்டு, எட்டு மாத சிறைத் தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
ஓடிக்கொண்டு இருந்த கனரக வாகனத்தில் அந்த மிருகத்தின் கொம்புகளை ஆடவிட்ட சரவணன், ஓட்டுநரான சிவகுமாருக்கும் சாலையைப் பயன்படுத்திய மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டார்.
திரு சிவகுமாரின் உறவினரான 18 வயது நவின் பார்த்திபனைத் தாக்கியதையும் சரவணன் ஒப்புக்கொண்டார்.
அந்த கொம்புகளின் நீளம் 40 சென்டிமீட்டர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கொம்புகள் எப்படி அங்கு வந்தன என்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவிலை.
2018 பிப்ரவரி 15ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு முன்பாக, தேபான் கார்டன்சில் உள்ள புளோக் 53ன் கீழ்த்தளத்தில் இம்மூவர் உள்ளிட்ட ஒரு குழு மது அருந்தியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மாலை 5 மணியளவில் தமது உறவினரான நவீனுடன் ஈசூனுக்கு செல்ல விரும்பிய திரு சிவகுமார், சரவணனையும் உடன் அழைத்துச் செல்ல சம்மதித்தார்.
கனரக வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சரவணனுடன் பேசிய அவரது பெண் தோழி, அவரை தோ பாயோவில் சந்திக்க விரும்பினார். தன்னை தோ பாயோவில் இறக்கிவிட முடியுமா என்று கேட்ட சரவணனின் கோரிக்கையை சிவகுமார் நிராகரித்தார். அதனைத் தொடர்ந்து சிவகுமாருடன் சரவணன் வாக்குவாதம் செய்ததை அடுத்து இந்த விபரீதம் நிகழ்ந்தது.

