கொரோனா கிருமி பரவி வரும் இந்தக் காலத்தில், என்டியுசி ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ், ஜயண்ட் ஆகிய பேரங்காடிகளில் அன்றாடப் பொருட்களை வாங்க வரும் மூத்தோர், கர்ப்பிணிகள், உடற்குறையுள்ளோரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பொருள் வாங்க அவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படவுள்ளது. அதாவது, பொருட்களை வாங்க அவர்களுக்காக ஒரு மணி நேரம் தனியாக ஒதுக்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் நிறுவனம் நேற்று தெரிவித்தது.
வரும் திங்கட்கிழமையிலிருந்து இந்த ஏற்பாடு நடப்பிற்கு வரும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஃபேர்பிரைஸ் பேரங்காடி செயல்படும் முதல் ஒரு மணி நேரம், மேற்கூறப்பட்ட அந்த மூன்று பிரிவினருக்காக ஒதுக்கப்படும்.
24 மணி நேரம் செயல்படும் பேரங்காடிகளில், காலை 7 மணி முதல் 8 மணி வரை அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல முடியும்.
கோல்ட் ஸ்டோரேஜ், ஜயண்ட் உள்ளிட்ட பேரங்காடிகளை இயக்கும் டைரி ஃபார்ம் குழுமம், இதுபோன்ற நடைமுறையை அறிமுகப்படுவதாகத் தெரிவித்தது.
தமது கடைகளில் பொருள் வாங்க, இந்த வாரத்திலிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் மூத்தோர், கர்ப்பிணிகள், உடற்குறையுளோருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என்று அக்குழுமம் கூறியது.
டைரி ஃபார்ம் குழுமத்தின்கீழ் 24 மணி நேரம் செயல்படும் பேரங்காடிகளில், காலை 8 மணி முதல் 9 மணி வரை மேற்கூறப்பட்ட பிரிவினர் பொருட்களை வாங்கலாம்.
பொது இடங்களில் மக்களுக்கு இடையே தூர இடைவெளியை அதிகரிப்பது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக சுகாதார அமைச்சு பரிந்துரைகளை வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து பேரங்காடி நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
"இந்த ஏற்பாட்டின் மூலம் மூத்தோர் உட்பட எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது. அவர்களுக்குக் கூடுதல் நேரமும் இடவசதியும் வழங்கப்படுகிறது.
"மாறிவரும் சூழலில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய எண்ணியிருக்கிறோம்," என்று ஃபேர்பிரைஸ் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியான் பெங் கூறினார்.
மேற்குறிப்பிடப்பட்ட நேரத்தில் பொருள் வாங்க முன்னோடித் தலைமுறையினர் தங்களின் முன்னோடித் தலைமுறை அட்டையை பேரங்காடி ஊழியர்களிடம் காட்ட வேண்டும்.
ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் முன்னோடித் தலைமுறையினருக்காக திங்கட்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் வழங்கப்படும் கூடுதல் சலுகை அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். மேற்குறிப்பிடப்பட்ட நேரத்தில் பொருள் வாங்க வரும் கர்ப்பிணிகள் மற்றும் உடற்குறையுள்ளவர்கள், தங்களது நிலை குறித்து பேரங்காடி நுழைவாயிலில் உள்ள ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

