வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவு தற்போது 38,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இன்னும் அதிகமான சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"அதிகமான உலக நாடுகள் தங்களை முற்றிலும் முடக்கிக்கொண்டிருப்பதால், இன்னும் பல சிங்கப்பூரர்கள் நாடு திரும்பக்கூடும். ஆகவே, வெளிநாடுகளிலிருந்து வரும் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களுக்கு சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும்," என்றும் அமைச்சர் கூறினார்.
கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங், விரைவாக மாறிவரும் உலக நிலைமையைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளையும் பயணக் கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கியது என்றும் விளக்கினார்.
இந்த வாரம், சுற்றுப்பயணிகள், வர்த்தகர்கள் போன்ற குறுகியகால வருகையாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழையவோ வெளியேறவோ தடை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் திரும்பும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள், அவர்கள் சுகாதாரப் பராமரிப்பு, போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்குபவராக இருந்தாலொழிய அவர்களும் சிங்கப்பூருக்கும் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கொரோனா கிருமித்தொற்று எவ்வித மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில், சிங்கப்பூர் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் முக்கியமான முடிவை எடுத்தது என்றும் அமைச்சர் விவரித்தார்.
"200,000க்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் தற்போது வெளிநாடுகளில் இருப்பதால், நாடு திரும்ப விரும்பும் சிங்கப்பூரர்களுக்கான நமது வளங்களைத் தயார்நிலையில் வைத்திருப்பது முக்கியம்.
"நாள்தோறும் சுமார் 1,200 சிங்கப்பூரர்கள் அமெரிக்காவிலிருந்தும் பிரிட்டனிலிருந்தும் நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்," என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் விரைந்து முன்னேற வேண்டும்
இரவு கேளிக்கை விடுதிகளுக்கும் ஒன்றுகூடல்களுக்கும் அதிகமானோர் இன்னும் சென்றுகொண்டிருப்பதால், சிங்கப்பூர் அவர்களுக்குள் பாதுகாப்பான இடைவெளியை அதிகரிப்பதற்கு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது என்றும் திரு வோங் கூறினார்.
அத்துடன் மற்றொரு நடவடிக்கையாக வேலைக்கு அப்பாலும் பள்ளிக்கு அப்பாலும் பத்து பேருக்கு மேல் கூடக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்தது.
இந்தப் புதிய நடைமுறை நேற்று இரவு 11.59 மணிக்கு நடப்புக்கு வந்தது.
"டிஸ்கோ மற்றும் இரவு கேளிக்கை விடுதிகளுக்கும் மக்கள் அதிக அளவில் செல்கிறார்கள். அதில் ஒருவருக்கு கிருமி தொற்றியிருந்தால் அது அங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் பரவி விடும். இது ஒரு மற்றொரு பெரிய நோய் குழுமமாக உருவெடுக்கும்.
"இந்த அபாயத்தைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்தது. இதில் அனைத்து கேளிக்கை நிகழ்வுகள், சினிமா அரங்குகள், துணைப் பாட நிலையங்கள், சமய சேவைகள் ஆகியவை அடங்கும்," என்றும் திரு வோங் பட்டியலிட்டார்.
"இந்த நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தையும் தடங்கல்களையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால், இந்த நடவடிக்கைகள் மக்களின் உயிரைக் காப்பாற்றும்.
"இந்த கிருமித்தொற்று தவிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், இதைவிட இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் அரசாங்கம் தயங்காது. பள்ளிகளையும் வேலையிடங்களையும் மூடுதல் அவற்றில் அடங்கும்.
"எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். இதனால், வெற்றி கிட்டினால் நடவடிக்கைகள் தளர்த்துப்படும். இல்லையேல் கடுமையாக்கப்படும்," என்றும் அமைச்சர் வோங் வலியுறுத்தினார்.

