தேர்தலைத் தள்ளிவைத்து அதிபரால் காபந்து அரசாங்கம் அமைக்கலாம் என்று எதிர்த்தரப்புத் தலைவர் டான் செங் போக் தெரிவித்த பரிந்துரை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் டான் தெரிவித்த யோசனைக்கு அரசாங்கத்தின் பதில் என்ன என்று ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி உறுப்பினர் கிறிஸ்டஃபர் டிசூசா கேட்டுக்கொண்டார்.
முன்பு 2011ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட டாக்டர் டான், இப்போது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்குத் தலைமை தாங்குகிறார்.
கொரோனா கிருமித்தொற்று நிலைமை சரியாகும் வரை பொதுத் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என்றும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் பொதுத் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் நாட்டைத் தொடர்ந்து வழிநடத்த அதிபர், சில நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட காபந்து அரசாங்கத்தை அமைக்கலாம் என்று யோசனை தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த திரு டியோ, "இந்த யோசனை சாத்தியமா என்று நான் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரியைக் கலந்தாலோசித்தேன். அதற்குத் தலைமைச் சட்ட அதிகாரி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கும் பொதுத் தேர்தலைத் தள்ளிப்போடுவது அரசியலமைப்புக்கு எதிரானது என்று பதிலளித்தார்," என்றார்.
"ஒரு நாடு அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தும்போதுதான் பொதுத் தேர்தலும் தள்ளிப்போடப் படலாம். அதுபோன்ற நிலை இதுவரை சிங்கப்பூருக்கு ஏற்பட்டதில்லை. அப்போதும்கூட நடப்பு அமைச்சரவை ஆட்சியில் இருக்கும்போது, ஒரு காபந்து அரசாங்கத்தை அதிபர் அமைப்பதற்கு சட்ட ரீதியாகவும் செயல்முறையிலும் தேவை இருக்காது.
"இப்படிப்பட்ட அரசியலமைப்புக்கு எதிரான யோசனையை ஒரு தெரிவாக மக்களிடம் கூறி, அவர்களைத் திசை திருப்ப முயல்வது நன்மை பயக்காது. மேலும் இதுபோன்ற யோசனையைத் தெரிவிப்பதன் மூலம் டாக்டர் டானுக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றி தெரியவில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.
"அவசரகால பிரகடத்தின்போது நியமிக்கப்பட்ட காபந்து அரசாங்கமாக இருந்தாலும், வாக்காளர்களின் ஆதரவின்றி அமைக்கப்பட்ட அந்த அரசாங்கத்தால் எவ்வித பெரிய முடிவையும் எடுக்க இயலாது," என்றும் திரு டியோ விளக்கம் அளித்தார்.
தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி பிரதமர் லீ சியன் லூங் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்ட மூத்த அமைச்சர் டியோ, "தேர்தலை எவ்வளவுக்கு எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கொரோனா கிருமித்தொற்று நிலைமையும் கணிக்க முடியாததாக உள்ளது," என்றும் கூறினார்.

