தற்போது அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கொவிட்-19 கிருமித் தொற்று நெருக்கடி ஒரு முடிவுக்கு வந்த பிறகு, நாட்டுப் பொருளியலும் சமுதாயமும் திடத்துடன் மீண்டு வர $1.9 பில்லியன் ஒதுக்கப்படுவதாக நேற்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளு மன்றத்தில் கூறினார்.
கொரோனா கிருமி நெருக் கடியால் ஏற்படக்கூடிய உடனடி பாதிப்புகளைச் சமாளிக்கும் அதே வேளையில் நெருக்கடி காலம் முடிந்த பின்னர் வரும் சிக்கல் களையும் களைய திரு ஹெங் நேற்று அறிவித்த துணை வரவுசெலவுத் திட்டம் அமைந்தது.
அவற்றில் சில முக்கிய நடவடிக்கைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
கூடுதல் மீள்திறன் பெற நிறுவனங்களுக்கு உதவி
நிறுவனங்கள் கூடுதல் மீள்திறன் பெற்றிட ஆதரவு வழங்குவது ஒன்று. இதன்படி வர்த்தகங்களும் நிறுவனங்களும் திரட்டும் ஒவ்வொரு இரண்டு வெள்ளிக்கும் அரசாங்கம் $1 தந்து ஈடுகட்டும். முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி இத்தொகை நான்கு வெள்ளிக்கு $1 ஆக இருந்தது.
பயிற்சி ஆதரவுத் திட்ட விரிவாக்கம்
கலைகள், கலாசாரம், போக்குவரத்துத் துறைகள் உட்பட ஏப்ரல் 1 முதல் பயிற்சியளிப்பதற்கான ஆதரவுத் திட்டத்தை அரசாங்கம் மேம்படுத்துகிறது.
ஊழியர்களைப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் அனைத்து துறைசார்ந்த முதலாளிகளுக்கும் இனி பண உதவி கிடைக்கும்.
அத்துடன் சிங்கப்பூரர்கள் தங்களுக்கு வழங்கப்படும் $500 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொகையை அக்டோபருக்குப் பதிலாக ஏப்ரல் 1 முதல் பயன்படுத்தி வகுப்புகளுக்குப் பதிந்துகொள்ளலாம்.
கொவிட்-19 தொடர்பான சுத்தப்படுத்தும் பணிகளுக்கு நிதி
உறுதிசெய்யப்பட்ட கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்ட இடங்களைச் சுத்தப்படுத்த நிபுணத்துவச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் இணைந்து நிதி வழங்கும்.