சுகாதார அமைச்சின் அதிகாரிகளைப்போல் ஆள்மாறாட்டம் செய்து தனிநபர் தகவல்களைச் சேக்ரிப்பது, அமைச்சிடமிருந்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறும் முன்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்படுவது தமது கவனத்திற்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தொலைபேசி அழைப்புகள் மூலம் மோசடிக்காரர்கள், மக்களிடமிருந்து நிதி விவரங்களைக் கோருவதாகவும் அமைச்சு இன்று (மார்ச் 27) வெளியிட்ட ஆலோசனைக் கடிதத்தில் குறிப்பிட்டது.
இதுபோன்ற மோசடி சம்பவங்களைத் தாங்கள் எதிர்கொண்டதாக www.scamalert.sg எனும் இணையப்பக்கத்தில் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
அத்தகைய தொலைபேசி அழைப்புகளில் ஒன்றாக, சுகாதார அமைச்சிலிருந்து அழைப்பதாகக் கூறி, ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் பேசும் குரல், “அவசர விவகாரம்” ஒன்று நிறைவேறாமல் இருப்பதாகவும் “இரு வாரங்களில் மருத்துவ அனுகூலங்கள் முடிவுறும்” என்றும் குறிப்பிட்டதாக அந்த அழைப்பை ஏற்ற ஒரு நபர் scamalert.sg இணையப்பக்கத்தில் பதிவிட்டார்.
இதேபோன்ற அழைப்பை ஏற்ற மற்றொருவர், ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
"கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தடம்கண்டறியும் நடைமுறைகளின்போது யாருடைய நிதி விவரங்களும் கோரப்படமாட்டா. அதேபோல, முன்கூட்டியே எங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் தவிர மற்றவர்களை எங்களிடமிருந்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறப்படமாட்டாது," என்ற் அமைச்சு தெளிவுபடுத்தியது.
சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், தொலைபேசி அழைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய 1800-333-9999 எனும் எண்ணில் சுகாதார அமைச்சைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.