கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியைச் சமாளிக்க உலகளாவிய தீர்வு அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
பொதுச் சுகாதாரம், பொருளியல் இறங்குமுகம், அறிவியல் மற்றும் ஆய்வு ஆகிய மூன்று துறைகளில் ஒத்துழைப்பு இடம்பெறவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்து இருக்கிறார்.
உலகின் 20 நாடுகளின் தலைவர்கள் (ஜி-20) இணையம் வழி உச்சநிலை மாநாடு நடத்தினார்கள். அதில் கலந்துகொண்டு தலைவர்களுடன் விவாதித்தபோது பிரதமர் லீ இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த இடம்பெறக்கூடிய பொதுச் சுகாதார நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்ட திரு லீ, நாடுகள் தங்களுடைய எல்லைக்குள் அந்தக் கிருமியைக் கட்டுப்படுத்திவிட்டாலும் வெளியில் இருந்து கிருமிகள் உள்ளே நுழையக்கூடிய ஆபத்து தொடர்ந்து இருந்து வரும் என்பதைச் சுட்டினார்.
ஆகையால் நாம் நம்முடைய ஆற்றல்களையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டு ஒருவர் மற்றொருவருக்கு உதவவேண்டும் என்றார் அவர்.
கொரோனா மிரட்டலைச் சமாளிக்க ஒவ்வொரு நாடும் அதனதன் நலனை மட்டும் கவனிப்பபது கவலையாக இருக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
உலகமயம் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்த்துக்கொண்டு, அதிக பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஒன்று மற்றொன்றைச் சார்ந்து இருப்பதை குறைத்துக் கொள்வதற்குத் தேவையான தேசிய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பல நாடுகளும் இப்போது கருதுவது இயற்கையான ஒன்றுதான் என்று திரு லீ தெரிவித்தார்.
ஆனால் இப்படி தன் நலனை மட்டும் கவனித்துக்கொண்டு உலக மயத்தைப் புறக்கணிப்பதை நாம் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கொரோனா பரவல், நாம் ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைந்து இணைந்து சார்ந்து இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் என்று கூறிய திரு லீ, அது உலகமயத்தால் ஏற்பட்டு உள்ள பாதிப்பு அல்ல என்றார். நாடுகளுக்கு இடையில் அதிக ஒத்துழைப்பு இடம்பெற வேண்டும். ஒத்துழைப்பு குறையக் கூடாது என்பதையே கொரோனா வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
ஜி-20 இணைய மாநாட்டில் கலந்துகொள்ளும்படி சிங்கப்பூருக்கு சவூதி அரேபியா அழைப்பு விடுத்து இருந்தது.
அந்த மாநாடு தொடங்கியபோது பேசிய சவூதி அரேபிய மன்னர் சல்மான், கொரோனா கிருமி மிரட்டலைச் சமாளிக்க ஆற்றல்மிக்க, ஒருங்கிணைந்த செயல் அவசியம் என்றார்.
“மானிட இனத்திற்கு ஏற்பட்டு இருக்கும் இந்த மிரட்டலைச் சமாளிக்க உலகளாவிய முயற்சி வேண்டும். நாம் ஐக்கியமாக வேண்டும். ஒத்துழைக்க வேண்டும் என்பதையே இந்த உலகம் எதிர்பார்க்கிறது,” என்று மன்னர் கூறினார்.
மூலதனச் சந்தைகளை எட்ட முடியாமலும் போதிய சுகாதார வசதிகள் இல்லாமலும் தடுமாறக்கூடிய ஏழை நாடுகள் செலுத்த வேண்டிய கடன்தொகையை ஒத்தி வைக்கும்படி ஜி-20 தலைவர்களை அனைத்துலக பண நிதியமும் உலக வங்கியும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டு இருக்கின்றன.
அதைச் சுட்டிக்காட்டிய சவூதி அரேபிய மன்னர், வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று உறுதிபட கூறினார்.
வழக்கத்திற்கு மாறான ஜி20 இணைய மாநாட்டில் கலந்து பேசிய தலைவர்கள், கொரோனா மிரட்டலைச் சமாளிக்க ஒட்டுமொத்தமான செயல் இடம்பெற வேண்டும் என்றனர்.
உலகப் பொருளியல் மந்தத்தில் வீழ்வதைத் தடுக்க கொள்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தப் பெரிய தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மானிட இனம் வெற்றிபெற வேண்டுமானால் பரந்த அளவிலான அனைத்துலக ஒத்துழைப்பு தேவை என்று சீன அதிபர் குறிப்பிட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கொரோனா கிருமித்தொற்று மிரட்டலைச் சமாளிக்க செயல்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஜி-20 நிதி அமைச்சர்களும் மத்திய வங்கித் தலைவர்களும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.
இருந்தாலும் அந்தத் திட்டம் தொடர்பில் விவரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
கொரோனா கிருமித்தொற்றை எதிர்த்து நாடுகள் போராடி வரும் நிலையில், சில நாடுகள் தன்னைப்பேணித்தன நடவடிக்கைகள் பற்றி விவாதித்து வருகின்றன.
சில நாடுகள் அத்தகைய நடவடிக்கைகளைக் கைக்கொண்டு உள்ளன.
பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளவும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் உறுதி கூறி இருக்கின்றன.
அது போலவே ஜி-20 நாடுகளின் தலைவர்களும் உறுதி அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் வர்த்தகச் சபை வலியுறுத்திக் கூறி இருக்கிறது.