கொரோனா கிருமி பரவல் காரணமாக வேலைகளை அல்லது வருமானத்தை இழந்தோர் ஏப்ரல் 1 முதல் அரசாங்கத்திடம் உதவி கேட்டு விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளோருக்கு ஒரு தடவை ரொக்க உதவியாக $500 வழங்கப்படும்.
காம்கேர் உதவித் திட்டத்தில் இடம்பெறாத குறைந்த, நடுத்தர வருமானம் உள்ள சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தற்காலிக நிவாரண நிதியின்கீழ் இந்த உதவியைப் பெறுவர்.
அவர்களின் அடிப்படை வாழ்க்கைச் செலவினத்திற்கு இந்த உடனடி உதவித் திட்டம் கைகொடுக்கும்.
இதற்கான விண்ணப்பம் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சால் நடத்தப்படும் எல்லா சமூக சேவை அலுவலகங்களிலும் எல்லா சமூக நிலையங்களிலும் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை கிடைக்கும்.
கிருமி பரவல் காரணமாக புதிய வேலையை தேடுவதில் சவால்களை எதிர்கொள்வோர் கொவிட்-19 ஆதரவு மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதன் மூலம் நீண்டகால நிதி உதவியையும் வேலை ஆதரவையும் அவர்கள் பெறுவர்.
ஊழியரணி சிங்கப்பூர், வேலை மற்றும் வேலைத்திறன் பயிற்சிக் கழகம் ஆகியவற்றிலிருந்து வேலை மற்றும் பயிற்சிக்கான ஆதரவைப் பெறுபவர்களாகவும் அவர்கள் இருந்தால் மே 1 முதல் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் மூன்று மாதங்களுக்கு மாதம் $800 வரை நிதி உதவி பெறுவர்.

