கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட அஞ்சல் ஊழியர் ஒருவர் கடிதங்கள் மீது எச்சில் துப்பியதாக ‘வாட்ஸ்அப்’ வாயிலாக பகிரப்பட்டு வரும் ஒலிப்பதிவில் உண்மை இல்லை என சிங்போஸ்ட் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.
அந்த ஒலிப்பதிவு மலேசியாவிலிருந்து பரவி வருவதாகவும் சுங்கை புலோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ்டஃபர் லீ என்பவர் பேசுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சாளர் கூறினார்.
இதற்கிடையே, சிங்கப்பூரின் புதிய கிருமித்தொற்று மையமாக உருவெடுத்திருக்கும் சிங்போஸ்ட் எனப்படும் சிங்கப்பூர் போஸ்ட்டின் பணிகள் நாளை திங்கட்கிழமை வழக்கநிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்போஸ்ட் நிலையத்தின் ஊழியர்களில் மூவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து துப்புரவுப் பணிகளுக்காக பொட்டலங்களைக் கையாளும் பணிகள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வழக்கநிலை திரும்பியதும் பொட்டலங்களின் விநியோகத்தில் சிறிது தாதமதம் இருக்கக்கூடும் என்றபோதிலும் கடித விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை புதிதாக 49 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் மூவர் சிங்போஸ்ட் ஊழியர்கள். 76 வயது சிங்கப்பூர் மாது, 29 வயது மலேசிய ஆடவர், 47 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆகியோர் அம்மூவர்.
கிருமி தொற்றியதாக முதலில் உறுதி செய்யப்பட்ட மாது மலேசியாவுக்குச் சென்று வந்தவர் என்றும் குத்தகை பணியாளர் அவர் என்றும் கூறப்பட்டது. கடந்த புதன்கிழமை அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இரண்டு முழுநேர ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.
மூவரும் ஒரே தளத்தில் பணியாற்றியவர்கள். அத்துடன் இவர்கள் யாரும் அஞ்சல் விநியோகிப்பாளரோ அல்லது பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களோ அல்லர் என்று சிங்போஸ்ட் கூறியது.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் வேலை செய்த அனைவரும் மறு உத்தரவு வரும் வரை வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் வேறு யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பதைக் கண்டறியும் பணி நடந்துவருவதாக சிங்போஸ்ட் கூறியது.
இதற்கிடையே கடிதங்கள் தொடர்பான பணியில் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தைக் குறைக்க சிங்போஸ்ட்டுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
வரும் வாரத்தில் பொட்டல விநியோகங்களில் தாமதம் ஏற்பட்டால் பொதுமக்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு அமைதிகாக்குமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.