இணைய மோசடிகளில் ஈடுபட்டதாக பதின்ம வயது இளையர் உள்ளிட்ட மூன்று ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
55க்கும் மேற்பட்ட வெவ்வேறு மோசடிச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதாகவும் மோசடி மூலம் அவர்கள் $13,500 ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
18 வயது இளையர் 50 இணைய மோசடிகளில் ஈடுபட்டதாகவும் $4,900க்கும் மேற்பட்ட பணத்தை ஏமாற்றியதில் அவருக்குத் தொடர்பு உண்டு எனவும் போலிசார் கூறினர்.
'கேரோசல்' இணைய வர்த்தகத்தளத்தில் முகக்கவசம் விற்பதாக வெளியான விளம்பரத்தைப் பார்த்து பலரும் வங்கி மூலம் பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அதன் பின்னர் முகக்கவசம் அவர்களுக்கு அனுப்பப்படவில்லை.
விளம்பரம் செய்தவரையும் தொடர்புகொள்ள இயலவில்லை என விசாரணையில் தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து அந்த இளையர் மீது இம்மாதம் 19ஆம் தேதி ஏமாற்றுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதற்கு அடுத்த நாள் மற்றொரு நபரான 26 வயது ஆடவர் மீது மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டது.
'கேரோசல்' இணையத்தளம் மூலம் $2,800 அனுப்பி ஏமாந்த ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
மூன்றாமவருக்கு 31 வயது. $5,600 மதிப்புள்ள நான்கு தனித்தனி இணைய மோசடிகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
இம்மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மீது 20ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.
ஆப்பிள் ஏர்போட்ஸ், மேசைக் கணினி, மிதிவண்டி போன்றவற்றை விற்பதாக 'கேரோசல்'லில் அவர் செய்த விளம்பரத்தைப் பார்த்துப் பலரும் தொடர்புகொண்டு பணத்தை வங்கி மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களுக்குப் பொருட்கள் அனுப்பப்படாததோடு அந்த ஆடவரைத் தொடர்புகொள்ளவும் இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மோசடிக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
தற்போதைய கொவிட்-19 கிருமி பரவல் சூழலைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்ற முயலும் மோசடிக்காரர்களின் வலையில் விழுந்துவிட வேண்டாம் என்றும் இணையத்தில் பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுமக்களை போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

