கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக சிங்கப்பூர் ஏற்று நடத்தும் இவ்வாண்டுக்கான ஷங்ரிலா கலந்துரையாடல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 5ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை இந்த வருடாந்திர கலந்துரையாடல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
சிங்கப்பூர் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு ஷங்ரிலா கலந்துரையாடலை ரத்து செய்ய தாம் முடிவெடுத்ததாக கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யும் உத்திபூர்வ கல்விக்கான அனைத்துலக கல்விக் கழகம் (ஐஐஎஸ்எஸ்) தெரிவித்தது.
முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற ஷங்ரிலா கலந்துரையாடல்களில் 40க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கொரோனா கிருமிப் பரவல் மோசமடைந்து வருவதால் பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதை ஐஐஎஸ்எஸ் சுட்டியது.
நிலைமை மேம்படாவிட்டால், ஜூன் மாதத் தொடக்கத்திலும் இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கக்கூடும்.
2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷங்ரிலா கலந்துரையாடல் ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறை.
ஷங்ரிலா ஹோட்டலில் ஒவ்வோர் ஆண்டும் வழக்கமாக ஜூன் மாதத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

