வீட்டிலேயே இருக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறியதற்காக சிங்கப்பூரர் ஒருவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு விட்டதாக குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் புலன் விசாரணைக்காக இவ்விவகாரம் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
கோ இல்யா விக்டர், 53, எனப்படும் அந்த ஆடவர் இம்மாதம் 19ஆம் தேதி இந்தோனீசியாவின் பாத்தாம் தீவிலிருந்து தானா மேரா படகு முனையம் வழியாக சிங்கப்பூருக்குத் திரும்பினார்.
ஆசியான் நாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்புவோர் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற அரசாங்க அறிவிப்பு இம்மாதம் 16ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி வீட்டில் தங்கி இருப்பதற்கான உத்தரவுக் கடிதம் கோவுக்கு வழங்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் 14 நாட்கள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
இந்த நியதியை மீறினால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என அவரை குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்தின் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
அப்படி இருந்தும் அந்தக் கடிதத்தைப் பெற்ற அதே நாளில் இந்தோனீசியாவுக்கு மீண்டும் சென்றார்.
ஐந்து நாட்கள் கழித்து இம் மாதம் 24ஆம் தேதி சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் நிலையம் வழியாக இந்தோனீசியாவிலிருந்த கோ சிங்கப்பூருக்கு திரும்பி வந்தார்.
அன்று முதல் ஏப்ரல் 7 வரை 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இரண்டாவது அறிவிப்புக் கடிதம் அவரிடம் தரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் கோவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில். "வீட்டிலேயே இருக்குமாறு அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் 19ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட கோ மார்ச் 24ஆம் தேதி திரும்பி வந்தார்.
"முதல் முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவைப் பின்பற்ற மறுத்த காரணத்தால் கோவின் பொறுப்பற்றதன்மை வெளிப்பட்டுள்ளது. வேண்டுமென்றே விதியை மீறியதால் அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுவதுடன் மேல்விசாரணைக்காக இந்த விவகாரம் சுகாதார அமைச்சிடம் பரிந்துரைக்கப்படுகிறது," என்று ஆணையம் கூறியுள்ளது.
பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் கோ சிங்கப்பூர் குடிமகனாக நீடித்தாலும் அவர் எந்தவொரு நாட்டுக்கும் பயணம் செல்ல முடியாது.
குடிமகன் ஒருவரின் பாஸ்போர்ட் இப்படி ஒரு காரணத்துக்காக ரத்து செய்யப்படுவது சிங்கப்பூரில் இது முதல் சம்பவம். வீட்டிலேயே இருக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறியதற்காக 45 வயது நிரந்தரவாசி ஒருவர் கடந்த மாதம் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அவரது நிரந்தரவாசத் தகுதியும் பறிக்கப்பட்டது.
ஆசியான் நாடுகளுக்குச் சென்றவர்கள் வீட்டிலேயே தங்கி இருக்கும் உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என இம்மாதம் 16ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு அமலுக்கு வந்த நடைமுறை 20ஆம் தேதி மற்ற நாடுகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது.
அதற்கிணங்க, சிங்கப்பூருக்கு வரும் எல்லாப் பயணிகளும் தங்களது சுகாதார, பயண உறுதிமொழிகள் அடங்கிய படிவத்தைச் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.

