கொரோனா கிருமி பரவுவதைத் தடுப்பதற்காக பத்து பேருக்கு மேல் ஒன்றுகூட அரசு தடை விதித்துள்ளது.
இதனால் பொதுஇடங்களில் வெளிநாட்டு ஊழியர்களும் பணிப்பெண்களும் ஒன்றுகூடுவது ஓரளவு குறைந்துள்ளது.
அண்மைய வாரங்களாக வெளிநாட்டு ஊழியர்கள் அடிக்கடி கூடும் இடங்களில் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருவருக்கு ஒருவர் குறைந்தது ஒரு மீட்டர் பாதுகாப்பான இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறைக்குப் பிறகு பொதுஇடங்களில் ஒன்றுகூடும் வெளிநாட்டு ஊழியர்களை அதிகாரிகள் ெதாடர்ந்து கலைத்து வருகின்றனர்.
சென்ற புதன்கிழமை இத்தகைய அமலாக்க முயற்சிகளை தீவிரமாக்கப்போவதாக மனிதவள அமைச்சு அறிவித்திருந்தது.
கலைந்து செல்லும் உத்தரவை மதிக்காத ஊழியர்களின் வேலை அனுமதிச் சீட்டு மீட்டுக்கொள்ளப்படும் என்று அது எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் 3வது வாரமாக நேற்று பொதுஇடங்களில் ஒன்றுகூடிய வெளிநாட்டு ஊழியர்களையும் பணிப்பெண்களையும் கலைந்து செல்ல அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
தீவு முழுவதும் 130க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் பெருமளவில் கூடும் லக்கி பிளாசா, லிட்டில் இந்தியா போன்ற இடங்களில் நாள் முழுவதும் சோதனைகள் நடைபெற்றன.
கலைந்து சென்ற ஊழியர்கள் அதே இடத்தில் மீண்டும் கூடுவதைத் தவிர்க்க அதிகாரிகள் அதே இடத்தை மீண்டும் சோதனையிட்டனர்.
போலிசார், வெளிநாட்டு ஊழியர் நிலைய பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு அமலாக்க நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
காலாங் எம்ஆர்டி நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள திடலில் வார இறுதியில் இந்தோனீசிய, பிலிப்பீன்ஸ் பணிப்ெபண்கள் கூட்டம் கூட்டமாக கூடி உரையாடி மகிழ்வது வழக்கம். ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக அந்த இடம் அமைதியாகக் காணப்பட்டது.
அமைச்சின் அமலாக்க நடவடிக்கைகள் பற்றி விளக்கிய மூத்த அதிகாரி ஒருவர், கொரோனா கிருமி பரவலுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளைப் பற்றி ஊழியர்களுக்கு விளக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றார்.
"கிருமி பரவலைத் தடுக்க வெளிநாட்டு ஊழியர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது," என்று மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர் நிர்வாகப் பிரிவின் அதிகாரியான ஜீனட் ஹார் நேற்று கூறினார்.

